இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உப்புக்குப் பெறாத விவகாரம் பெரும் பிரச்சினையானதை அடுத்து 48 மணி நேரம் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. 31 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அந்த மாநிலத்தின் ஜால்கான் என்ற மாவட்டத்தில் அமல்நேர் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விளையாட்டுப் பொம்மைகள் தொடர்பில் இரண்டு பிரிவினருக்கு இடையில் நடந்த பேச்சு முற்றி வன்செயலாக மாறியது என்று இந்தியா டுடே நேற்று தெரிவித்தது.
இரண்டு தரப்பினரும் பயங்கர அடிதடியில் இறங்கினர்.
தெருவில் பொம்மைகளை வண்டியில் விற்றுச் சென்ற ஒருவரைத் தாக்கி அவரின் வண்டியைத் தலைகுப்புற தள்ளிவிட்டனர். சாலை எங்கும் செங்கற்கள் உடைந்து கிடந்தன.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 31 பேரைக் கைது செய்தனர். பலருக்கும் எதிராக வழக்குகளைப் பதிந்தனர்.
ஜூன் 10ஆம் தேதி முதல் இன்று திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஊரடங்கை அவர்கள் விதித்தனர்.
தேவை எனில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புரளிகளை நம்ப வேண்டாம் என்று மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.