உக்ரேனில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதாக அந்த நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ நேற்று உக்ரேனுக்குத் திடீர் வருகை அளித்தார்.
காகோவ்கா என்ற பெரிய அணையை உடைத்துவிட்டு பல இடங்களிலும் வெள்ளம் ஏற்படுத்தியதற்காக அவர் ரஷ்யாவைக் குறைகூறினர்.
“உக்ரேனில் எதிர் தாக்குதலும் தற்காப்புத் தாக்குதலும் நடந்து வருகின்றன. இந்தக் கட்டத்தில் மேற்கொண்டு எதையும் நான் தெரிவிக்க இயலாது,” என்று உக்ரேனிய அதிபர் கனடா பிரதமருடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட உக்ரேனின் பதிலடித் தாக்குதல் தோற்றுப்போய்விட்டதாக ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்ததை அடுத்து அதிபர் ஸெலென்ஸ்கி இவ்வாறு குறிப்பிட்டார்.
உக்ரேனின் கிழக்கிலும் தெற்கிலும் உக்ரேனியப் படைகளின் தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்து இருக்கிறது.
தான் ராணுவத் தளபதிகளுடன் அன்றாடம் தொடர்புகொண்டு வருவதாகவும் ஒவ்வொருவரும் இப்போது நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறிய உக்ரேன் அதிபர், இது புட்டினுக்குப் புரிய வேண்டும் என்றார்.
தெற்கு உக்ரேனில் உள்ள காகோவ்கா அணைக்கட்டு ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த அணைக்கட்டு உடைந்து பல இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர். பெரிய அளவில் மனிதாபிமான உதவி தேவைப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பேரழிவு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவும் ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்த அணைக்கட்டு உடைந்ததற்கு ரஷ்யாதான் காரணம் என்று கனடியப் பிரதமர் கண்டித்தார். ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள உக்ரேனியர்களுக்கு உதவி செய்ய முன்வரும்படி அனைத்துலக அமைப்புகளை உக்ரேனிய அதிபர் வலியுறுத்தினார்.