விபத்துகளில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், உடன் பயணம் செய்தோர் எண்ணிக்கை
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, கடந்த ஈராண்டுகளின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், அதன் பின்னிருக்கையில் பயணம் செய்தோரின் மொத்த எண்ணிக்கை அது.
2021, 2022ஆம் ஆண்டுகளில் அவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை முறையே 12 மற்றும் 12.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 21 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை என்று மோட்டார் சைக்கிள், சாலைப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறினர்.
கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை நிலையாக இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சாலை விபத்தில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுடன் பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அச்சுறுத்தலாக அமைந்தாலும் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவர் பெர்னார்ட் டே கூறினார்.
அப்போதுதான் தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றார் அவர்.
ஒரு காலாண்டில் 21 பேர் உயிரிழப்பு என்ற எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகம்தான் என்றார் அவர்.
மோட்டார் சைக்கிளோட்டிகள் அவர்களின் வாகனங்களை முறையாகக் கட்டுப்படுத்தாததும் போக்குவரத்துச் சமிக்ஞைகளை மீறி வாகனங்களைச் செலுத்தியதும் விபத்துகளுக்கான முக்கியக் காரணங்களில் சில என்று காவல்துறை குறிப்பிட்டது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்னிருக்கையில் பயணம் செய்தோரும் மாண்ட சம்பவங்களில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டிகளா வெளிநாட்டு மோட்டார் சைக்கிளோட்டிகளா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
சென்ற ஆண்டு 3,854 விபத்துகளில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்தோரும் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு அந்த எண்ணிக்கை 3,464 ஆக இருந்தது.
சென்ற ஆண்டு முழுவதும் விபத்துகளில் உயிரிழந்த அத்தகையோரின் எண்ணிக்கை 47.
2021ஆம் ஆண்டில் 50 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் மாண்டனர்.
“சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் அதிகரிக்க வேண்டும்.
“மோட்டார் சைக்கிளோட்டிகள், மற்ற வாகன ஓட்டுநர்கள் என அனைவரும் சாலைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்,” என்று மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு, விளையாட்டு மன்றத்தின் தலைவர் ஓங் கிம் ஹுவா கூறினார்.
“விபத்தில் மரணம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களில் ஓட்டுநரின் வயது, வாகனமோட்டிய அனுபவம், சில நேரங்களில் வானிலை போன்ற அம்சங்களுக்கு முக்கியப் பங்குண்டு,” என்றார் திரு ஓங்.
அங்கீகரிக்கப்பட்ட தலைக்கவசம், அங்கி, கையுறைகள், பொருத்தமான காலணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்படி மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு காவல்துறை ஆலோசனை கூறியது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பயணம் செய்யும்படி அது அறிவுறுத்தியது.
பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களுக்குப் பார்வையை மறைக்கும் ‘பிளைண்ட் ஸ்பாட்’ எனும் இடங்களைத் தவிர்க்கும்படி மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறி உள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலைப் போக்குவரத்துச் சமிக்ஞைகளை மதித்து நடப்பது மிக முக்கியம் என்று காவல்துறையினர் வலியுறுத்தினர்.