சீனா தமது இரு பெரிய அண்டை நாடுகளான இந்தியாவுடனும் ரஷ்யாவுடனும் உள்ள ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த உறுதி தெரிவித்துள்ளது. இந்தியா சென்றுள்ள சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லேவ்ரோவையும் தனித்தனியாகச் சந்தித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர்களின் இருநாள் மாநாடு நேற்றும் நேற்று முன்தினமும் இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடைபெற்றது. அமைப்பில் இடம்பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர்கள் ஒருவரையொருவர் சந்தித்து தங்களது நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர், உக்ரேன் நெருக்கடி தீர்வுக்கு சீனா ஒத்துழைக்கத் தயார் என்று தெரிவித்தார்.
அப்போது, அமைப்பில் இடம்பெற்றள்ள எல்லா நாடுகளுடனும் தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டன. கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘எஸ்சிஓ’ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்று உள்ளன.
கோவா மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ வந்திருந்தது முக்கிய செய்தியாக ஊடகங்களில் பகிரப்பட்டது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. குறிப்பாக, மோடி அரசாங்கம் அமைந்த பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தருவதும் இதுவே முதல் சம்பவம்.
பிலாவல் புட்டோ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் கைகுலுக்கிக் கொண்டபோதிலும் இருவருக்கும் இடையில் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை.
சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்கைச் சந்தித்த பின்னர் அறிக்கை வெளியிட்ட திரு ஜெய்சங்கர், இந்தியா-சீனா இடையே மூன்றாண்டாக நீடிக்கும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது பற்றி சீன அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.