அப்பர் தாம்சன் வட்டாரத்தில் உள்ள சின் மிங் ரோட்டில் 900க்கும் மேற்பட்ட வீவக வீடுகள் கட்டப்பட உள்ளன. கடந்த 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த வட்டாரத்தில் புதிய வீடுகள் கட்டப்படுவது இதுவே முதல்முறை.
மொத்தம் ஐந்து குடியிருப்பு புளோக்குகள் அங்கு கட்டப்படும். அவை அனைத்தும் 2027ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு 984 புதிய வீடுகள் அங்கு இருக்கும். 22 மாடிகள் முதல் 28 மாடிகள் வரையில் அந்த ஐந்து புளோக்குகளும் கட்டப்படும்.
ஏழு மாடி கார்நிறுத்தமும் சமூகக் கூடங்கள் மற்றும் கட்டட உச்சித் தோட்டங்களும் அங்கு இடம்பெறும் என கட்டுமானத் தளத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
கட்டுமானத் தளத்தின் புகைப்படங்கள் ரெடிட் சமூக ஊடகத்தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டன.
சின் மிங் ரோடு புளோக் 25ன் அருகே உள்ள தளத்தை கடந்த புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்று பார்த்தபோது அங்கு கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டு இருந்தன. பிடிஓ திட்டத்தின்கீழ் அந்த வீடுகள் கட்டப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பொதுவாக, பிடிஒ திட்டங்கள் பிப்ரவரி, மே, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கப்படும். ஆயினும், வரும் மே, ஆகஸ்ட் மாதங்களில் பிடிஓ திட்டங்கள் தொடங்கப்படுவது குறித்து வீவகவின் இணையத்தளத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டு சின் மிங்கில் வீவக புளோக்குகள் கட்டப்பட்டதாக சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் கூறினர். அப்போது சின் மிங் அவென்யூவில் 945 வீடுகள் கட்டப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த வட்டாரத்தில் பிடிஓ வீடுகளுக்கான தேவை தேக்கமடைந்து இருக்கலாம் என்று ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு மூத்த இயக்குநர் லீ சே டெக் கூறினார்.
சின் மிங் திட்டத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு முதல் நான்கு விண்ணப்பங்களே இடம்பெறக்கூடும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.