ஆசியாவில் ஒரு போர் மூண்டால் அது உக்ரேன் போரைவிட மோசமானதாக இருக்கும். எனவே அதுபோன்ற உரசல்களைத் தவிர்ப்பது அடுத்த பத்தாண்டுகளில் எல்லா நாடுகளின் தலையாயப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
“அதுபோன்ற மோதல்கள் முதலாம் உலகப் போருக்குப் பிந்திய பேரழிவாக இருக்கும். அந்தப் போரில் நான்கு பேரரசுகள் அழிந்ததோடு நாடுகள் மற்றும் அரசாங்கங்களுக்கான வரைபடம் மாற்றி வரையப்பட்டது.
“எனவே நாடுகளுக்கு இடையிலான பூசலைத் தவிர்க்க அரசதந்திர முயற்சிகளை இருமடங்கு அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது,” என்றார் அவர்.
‘ஐஎம்டிஇஎக்ஸ் ஏஷியா’ எனப்படும் கடல்துறை தற்காப்புக் கண்காட்சி மற்றும் ஆசிய மாநாட்டின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
“இந்த கடல்துறை தற்காப்பு மாநாடு, கொவிட்-19 காலத்தைக் கடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் நடத்தப்படுகிறது. நாளை வரை நீடிக்கும் மூன்று நாள் மாநாடு சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.
உக்ரேன் போர் நிகழ்ந்துகொண்டு இருக்கும் வேளையிலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தத் தற்காப்பு மாநாடு நடத்தப்படுவதாக டாக்டர் இங் தெரிவித்தார்.
வட்டார நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது என்றார் அவர்.
“ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஒரே நேரத்தில் போர் நிகழ்ந்தால் அது நாம் எல்லாருக்கும் பேரழிவாக அமைந்துவிடும்.
“போருக்கான சூழலைத் தவிர்க்க பொருளியல் உறவுகளை வலுப்படுத்தி அதனை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே உணர்த்தி உள்ளது.
“மேலும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கட்டி எழுப்பிய ஒன்றையொன்று சார்ந்திருக்கும் போக்கும் இப்போது தலைகீழாக மாறிவிட்டது.
“ரஷ்யா ஐரோப்பாவுடன் இணக்கமாகச் செயல்படும் என்பதை நான் தொடர்புகொண்டு பேசிய ஐரோப்பியத் தலைவர் ஒருவர்கூட ஒப்புக்கொள்ளவில்லை. இந்தத் தலைமுறை மட்டுமல்ல, நெடுங்காலத்துக்கும் இதே நிலைமை நீடிக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
“ஐரோப்பாவுடன் ரஷ்யா இணைந்து செயல்படும் என்ற நம்பிக்கை காற்றில் பறந்துவிட்டது.
“இப்படி ஒரு நிலைமை ஆசியாவில் ஏற்படுமா, அது இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பரவுமா என்பதே இப்போது நம் முன் உள்ள முக்கிய கேள்வி.
“உக்ரேன்போல ஆசியாவிலும் பூசல் ஏற்பட்டால், குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையே மோதல் நிகழ்ந்தால் அது கற்பனை செய்து பார்க்க இயலாத இழப்புகளை ஏற்படுத்தும். நாம் இப்போது எதிர்கொள்ளும் உலகிற்கு சொல்லவொண்ணாத் துயரை உருவாக்கிவிடும்,” என்று டாக்டர் இங் தெரிவித்தார்.