அதிபர் விளாடிமிர் புட்டினை கொலை செய்ய உக்ரேன் முயன்றதாக ரஷ்யா குற்றம் சுமத்தி உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா வானூர்திகள் மர்மமான முறையில் பறந்ததாகவும் தாக்குதலைத் தொடுக்கும் நோக்கில் அவை பறக்கவிடப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இருப்பினும் அந்த வானூர்திகள் செயலிழக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கூறின. சம்பவம் நிகழ்ந்த வேளையில் அதிபர் புட்டின் கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும் மாளிகைக் கட்டடங்களுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்றும் அவை குறிப்பிட்டன.
இது தொடர்பாக சரிபார்க்கப்படாத காணொளி ஒன்று ரஷ்ய சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. மத்திய மாஸ்கோமீது புகை வெளியாவதை அது காட்டியது. ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உக்ரேன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்றும் இதுபோன்ற செயல்களுக்கு எப்போது, எப்படி பதிலடி தரவேண்டும் என்பது ரஷ்யாவுக்குத் தெரியும் என்றும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியது. மே 9 வெற்றிப் பேரணியை ரஷ்யா நடத்த இருக்கும் வேளையில் புட்டினைக் கொல்ல முயற்சி நடந்திருப்பதாகவும் அது தெரிவித்தது.