மே தினத்தின்போது பிரான்சின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வெடித்த வன்முறையில் குறைந்தது 108 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டஹ்மனன் தெரிவித்துள்ளார்.
இப்படி அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் காயம் அடைந்தது அரிதினும் அரிது என்று திரு ஜெரால்ட் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் 291 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை எதிர்த்து பல நூறாயிரக்கணக்கானோர் மே தினப் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையில், சில இடங்களில் காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வாணங்களையும் வீசியதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் நீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களைக் கலைக்க முயன்றனர்.
போராட்டக்காரர்களில் எத்தனை பேர் காயமுற்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என பிபிசி செய்தி கூறியது.
இதனிடையே, ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பல்வேறு நகரங்களில் அமைதியாகப் போராடி, பொறுப்புடன் நடந்துகொண்டவர்களையும் அவர் பாராட்டினார்.
தலைநகர் பாரிசில் 112,000 பேர் உட்பட நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏறத்தாழ 782,000 பேர் பங்கேற்றதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தும் சட்டத்தில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் அண்மையில் கையெழுத்திட்டார். அச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், ஓய்வூதியச் சீர்திருத்தம் தேவையான ஒன்று என அதிபர் மெக்ரோன் கூறி வருகிறார்.
கடந்த மாதம் 15ஆம் தேதி அச்சீர்திருத்தச் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டார். இவ்வாண்டு செப்டம்பர் மாதவாக்கில் அந்தச் சட்டம் நடப்பிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முன்வந்துள்ளபோதும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.