ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம், மேரிபுரோ எனும் பகுதியில் காரைத் திருடி அதை ஓட்டியதாகக் கூறப்படும் 13 வயதுச் சிறுவன் ஒருவன், நேற்று விபத்தை ஏற்படுத்தினான்.
பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் மோசமாகக் காயமடைந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 52 வயது தாதியரும் 29 வயது மற்றும் 17 வயதுப் பெண்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்தனர்.
மோசமாகக் காயமடைந்த நான்காமவர், 23, கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, குவீன்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவையை மேற்கோள்காட்டி ‘7நியூஸ் ஆஸ்திரேலியா’ ஊடகம் அதன் செய்தியில் குறிப்பிட்டது.
விபத்துக்குக் காரணமான அச்சிறுவனுக்கு கணுக்காலில் இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவன் விசாரணைக் காவலில் இருப்பதாக ‘ஏபிசி நியூஸ்’ கூறியது.
இந்த விபத்து நிகழ்வதற்கு முன்பே அச்சிறுவனைக் காவல்துறையினருக்குத் தெரியும் எனக் கூறப்படுகிறது.
தாம் திருடியதாகக் கூறப்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் காரை ஓட்டி உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு விபத்தை ஏற்படுத்தியதாக அச்சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
பின்னர் ஒரு தேதியில் அவன் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்து நிகழ்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அந்த கார் திருடப்பட்டது என்று காவல்துறை நம்புவதாக ‘9நியூஸ்’ ஊடகம் குறிப்பிட்டது.
அந்த மெர்சிடிஸ் காரில் இருந்த வேறொருவர் விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பி ஓடியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவரும் மேரிபுரோ பகுதி குடியிருப்பாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, குவீன்ஸ்லாந்து முதல்வர் அனஸ்தேசியா புலாஸ் சூக், இந்த விபத்தை “மிக மோசமான துயரச் சம்பவம்” என்று வர்ணித்தார்.
“இது நடந்திருக்கக்கூடாது,” என்றார் அவர்.