வன்முறையால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் சூடான் நாட்டிலிருந்து 500க்கும் மேற்பட்ட இந்திய நாட்டவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்றன.
‘ஆபரேஷன் காவேரி’ என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் இதுவரை 360 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நேற்றுக் காலை வந்திறங்கிய அவர்கள் பெருந்துயரில் இருந்து தப்பித்ததை கண்ணீரால் வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மூண்டுள்ள சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாடு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அங்கு தங்கி உள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாடுகள் வேகமாகச் செயல்பட்டு வருகின்றன.
அதற்கு உதவும் விதமாக 72 மணி நேர சண்டை நிறுத்தத்தை சூடான் ராணுவம் அறிவித்தது.
இந்திய அரசாங்கத்தால் மீட்கப்பட்ட முதல் இந்தியர் குழு நேற்று முன்தினம் இரவு புதுடெல்லி வந்திறங்கியது.
அவர்களில் பெரும்பாலானோர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சூடானில் உள்ள உலோகத் தொழிற்சாலைகளிலும் ஓடு தயாரிக்கும் தொழிற்கூடங்களிலும் வேலை செய்தவர்கள் அவர்கள்.
குஜராத்தையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த வர்த்தர்களும் மருத்துவர்களும் மீட்கப்பட்டோரில் அடங்குவர். ஜோதி அகர்வால் என்பவர் தமது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் டெல்லியில் இறங்கினார்.
தமது கணவர் சூடானில் கணக்காய்வாளராக வேலை செய்ததாகக் கூறிய அந்தப் பெண், “நாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைக்கவில்லை. எங்களுக்கு அருகே இரண்டு வீதிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் வெடிகுண்டு தாக்குதலில் தரைமட்டமாகிவிட்டன. நாங்களும் உயிரிழந்து இருப்போம்,” என்று அச்சத்துடன் கூறினார்.
புதுடெல்லி வழியாக சென்னை வந்திறங்கியவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை.
ஜோன்ஸ் திரவியம், அவரது மனைவி சீத்ரூத் ஜெபா, இவ்விருவரின் மகள்கள் ஜென்னி ஜோன்ஸ், ஜோஸ்னா ஜோன்ஸ் ஆகிய அந்த நால்வரும் சொந்த ஊர் செல்ல விமானம் மூலம் மதுரை சென்றனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சூடான் நாட்டு மக்கள் வன்முறையால் பெரும் அவதிக்கு ஆளாகி இருப்பதாகக் கூறினர்.
“3,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழும் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம், குடிநீர், இணையத் தொடர்பு என்று எந்த வசதியும் இல்லை. வெடிகுண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உயிருக்குப் பயந்து 10 நாள்களுக்கும் மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கினோம். வாட்ஸ்அப் குழு ஒன்று புதிதாக ஏற்படுத்தி அதன்மூலம் தமிழர்கள் இணைந்தோம்,” என்று திரு ஜோன்ஸ் திரவியம் தெரிவித்தார்.