புதிய வகை கொரோனா கிருமி பரவி வருவதால் பள்ளிக்கூடப் பிள்ளைகள் முகக்கவசம் அணிவதை மீண்டும் அறிமுகம் செய்வது பற்றி மலேசியா யோசித்து வருகிறது. எக்ஸ்பிபி1.16 என்னும் ஓமிக்ரானின் புதிய நுண்கிருமியை ‘ஆக்டரஸ்’ என்று சமூக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, மலேசியாவில் இதுவரை 12 பேருக்கு அந்தப் புதிய கிருமி தொற்றி உள்ளது. அதிகமாக சரவாக்கில் ஆறு பேருக்கும் சிலாங்கூரில் நால்வருக்கும் கோலாலாம்பூரில் இருவருக்கும் ஆக்டரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டது.
புதிய வகைக் கிருமி மூலம் சமூகத்திற்குள் மீண்டும் கொவிட்-19 தலைதூக்குவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்னர் கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக்குடன் விரைவில் கலந்துபேச இருப்பதாக டாக்டர் ஸலிஹா தெரிவித்து உள்ளார்.
“இந்த வாரம் கல்வி அமைச்சரைச் சந்திக்க உள்ளேன். புதிய வகைக் கிருமிப் பரவலால் பள்ளிக்கூடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றி அப்போது இருவரும் கலந்து பேசுவோம்.
“அதன் அடிப்படையில் என்னென்ன வழிமுறைகளை வகுக்கலாம் என்பது பற்றி முடிவெடுப்போம்,” என்று டாக்டர் ஸலிஹா கூறினார்.
மே 2ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் புதிய வழிமுறைகளும் செயல்பாட்டு நடைமுறைகளும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நோன்புப் பெருநாள் விடுமுறையைக் கழிக்க பல இடங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கிருமி தொற்றினால் அது பள்ளிக்கூடங்களில் பரவி கொவிட்-19 புதிய அலையை உருவாக்கிவிடக்கூடும்,” என்று மலேசியாவின் பெரித்தா ஹரியான் செய்தித்தாளிடம் அவர் கூறினார்.
பின்னர் அவர் ‘த ஸ்டார்’ இணையச் செய்தியிடம் பேசும்போது, மீண்டும் மாணவர்கள் முகக்கவசம் அணிய பரிந்துரை செய்யப்படும் என்றும் இருப்பினும் அதனைக் கட்டாயமாக்கும் யோசனை எதுவும் இல்லை என்றும் கூறினார்.
பள்ளிக்கூடப் பிள்ளைகளோடு பொதுமக்களும் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்படுமா என்று கேட்டதற்கு, வெகு விரைவில் அப்படி ஒரு நிலை ஏற்படலாம் என்று அமைச்சர் பதிலளித்தார்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத் தொடர வேண்டும் என்று ஏற்கெனவே அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஃபௌஸி சிங்கோன் கூறுகையில், “பள்ளிகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டால் நடப்பில் உள்ள விதிகளே அதற்குப் போதுமானதாக இருக்கும்,” என்றார்.
தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முகக்கவசம் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றார் அவர்.
பள்ளிக்கூட வளாகங்களில் முகக்கவசம் அணிவதை 2022 செப்டம்பரில் மலேசிய அரசாங்கம் தளர்த்தியது.