ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் 2021 ஆகஸ்ட்டில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமான ஐஎஸ்-கே அமைப்பின் தலைவர் ஒருவரை தலிபான் படையினர் கொன்றுவிட்டதாக வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது.
அந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேரும் குடிமக்கள் கிட்டத்தட்ட 170 பேரும் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அந்த ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது குறித்து ஏப்ரல் தொடக்கத்தில் அமெரிக்க உளவுத்துறை நிபுணர்களுக்குத் தெரியவந்ததாக அமெரிக்க அதிகாரிகள் நால்வர் கூறினர்.
காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அந்த ஐஎஸ்-கே தலைவரின் அடையாளத்தை வெளியிட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அந்த ஐஎஸ் தலைவரைக் குறிவைத்து தலிபான் படையினர் தாக்குதல் மேற்கொண்டனரா, தலிபானுக்கும் ஐஎஸ் போராளிகளுக்கும் இடையே அதிகரித்துவரும் தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டாரா என்பது பற்றித் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தலிபான் நடத்திய தாக்குதலை, இவ்வாண்டு ஐஎஸ்-கே பிரிவுக்கு ஏற்பட்ட மற்றொரு பெரிய அளவிலான தலைமைத்துவ இழப்பு என்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் திரு ஜான் கிர்பி வர்ணித்தார்.
ரகசிய உளவு அறிக்கைகளின்படி, அந்த ஐஎஸ்-கே தலைவர் கொல்லப்பட்டதாக உளவுத்துறை நிபுணர்கள் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், அந்த முடிவுக்கான ஆதாரங்களையோ அந்த ஐஎஸ்-கே தலைவரின் மரணம் பற்றிய மேல்விவரங்களை அதிகாரிகள் வழங்கவில்லை.
காபூல் விமான நிலையத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை நேற்று முன்தினம் அழைக்கத் தொடங்கிய அமெரிக்க அதிகாரிகள், தலிபான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்த ஐஎஸ்-கே தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவர்களிடம் தெரிவித்தது.
ஆனால், அந்த ஐஎஸ்-கே தலைவரின் விவரங்களை அவர்களிடம் பகிர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
“அவரது பெயரை அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. தலிபான் படையினரின் நடவடிக்கை குறித்து மேல்விவரங்களை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை,” என்று காபூல் விமான நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஸ்டாஃப் சார்ஜண்ட் டெய்லர் ஹூவரின் தந்தை திரு டேரின் ஹூவர் கூறினார்.