இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்கர் மாவட்டத்தில் நேற்று அதிநவீன வெடிபொருள் வெடித்து சிறிய வேன் ஒன்று தகர்க்கப்பட்டதில் அதிலிருந்த காவல்துறையினர் பத்துப் பேரும் வேன் ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.
உளவுத்துறை அளித்த தகவலின்படி, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான திடீர் நடவடிக்கையை முடித்துக்கொண்டு காவல்துறையினர் வேனில் திரும்பிக்கொண்டு இருந்தபோது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினரை தாங்கள் தாக்கப்போவதாக மாவோயிஸ்டுகள் கடந்த வாரம் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
உயிரிழந்த அந்தக் காவல்துறையினர், சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் பிரிவான மாவட்ட பாதுகாப்புப் படையை (டிஆர்ஜி) சேர்ந்தவர்கள். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியை அவர்கள் பெற்றிருந்தனர்.
இடதுசாரி பயங்கரவாதத்திற்குத் தளமாகத் திகழும் பஸ்தர் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக அமைந்ததற்கு டிஆர்ஜி படை முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.
வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலை தொடர்புகொண்டு பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாத்தியமுள்ள அனைத்து உதவியும் வழங்க உத்தரவாதம் அளித்தார்.
“டிஆர்ஜி படையைக் குறிவைத்து நடத்தப்பட்ட ‘ஐஇடி’ வெடிகுண்டுத் தாக்குதலில் காவல்துறையினரும் வேன் ஓட்டுநரும் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தார் அனுபவிக்கும் துயரை நாங்களும் பகிர்கிறோம். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்,” என்று திரு பாகல் டுவிட்டரில் பதிவிட்டார்.
நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள், அரசாங்கத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நிலவிவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட்டனர்.
சமுதாயத்தில் பின்தங்கியுள்ள ஏழை எளியவர்களின் சார்பாக தாங்கள் சண்டையிட்டு வருவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.
1967லிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.