தோளோடு தோள் நிற்க தொழிற்சங்கம் உறுதி
சிங்கப்பூர் ஊழியர்கள் எதிர்காலத்தில் செழிப்புற ஏதுவாக, தொழில்நுட்பவியல் மாற்றம், புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளியலில் நிலையற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க அரசாங்கத்துடனும் நிறுவனங்களுடனும் தோளோடு தோள் நிற்போம் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.
சம்பளம், வேலையிடச் சூழல், ஓய்வுபெறும் வயது போன்றவை தொடர்பில் உலகின் பல பகுதிகளிலும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் நிறுவனங்களுடன் முட்டிமோதி வருகின்றனர்.
ஆனால், தொழிலக உறவுகளை நிர்வகிப்பதில் அத்தகைய மோதல் போக்கு என்டியுசியின் அணுகுமுறையாக இராது என்று என்டியுசி தலைவர் மேரி லியூவும் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டிற்கான மே தினச் செய்தியில், தொழிற்சங்கம் முன்னுரிமை அளிக்கவிருக்கும் விஷயங்களையும் அதன் திட்டங்கள் குறித்த அண்மைய தகவல்களையும் அவர்கள் பட்டியலிட்டனர்.
ஊழியர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக, நிறுவனங்களுடன் இணைந்து 1,300 நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் அத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 100,000 ஊழியர்கள் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், மேலும் பல நிறுவனங்கள் அத்திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
குறைந்த வருமான ஊழியர்கள், இணையவழி ஊழியர்கள், வர்த்தகத் தொழிலர்கள், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உதவவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் இருவரும் குறிப்பிட்டனர்.
எடுத்துக்காட்டாக, ஜூலை மாதவாக்கில் கழிவு மேலாண்மை, சில்லறை வணிகம், உணவு சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 135,000 குறைந்த வருமான ஊழியர்கள் படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின்கீழ் சம்பள உயர்வு பெறுவர்.
மத்திய சேம நிதிப் பங்களிப்பு போன்ற வழிகளில் இணையவழி ஊழியர்களின் ஓய்வுக்காலம், வீடமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம், நிறுவனங்கள் என்ற தனது முத்தரப்புப் பங்காளிகளுடன் என்டியுசி இணைந்து செயலாற்றி வருகிறது.
குழாய், மின்சார வேலை செய்யும் தொழில்நுட்பர்கள் நல்ல தேர்ச்சிகளையும் ஊதியத்தையும் பெற்று மேம்பட ஏதுவாக, வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டு மாதிரித் திட்டத்தைத் தழுவுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்படுவர்.