‘ஆப்பிள்’ நிறுவனம், இந்தியாவில் அதன் முதலிரு கடைகளைத் திறந்துவைக்க இந்த வாரம் இந்தியா சென்றுள்ள அதன் தலைமை நிர்வாகி டிம் குக், தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்தார்.
வேகமாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளியலில் மேலும் முதலீடு செய்ய அவர் உறுதி அளித்துள்ளார்.
திரு மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு டுவிட்டரில் பதிவிட்ட திரு குக், “கல்வி, மேம்பாட்டாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள், சுற்றுப்புறம் வரை இந்தியாவில் பல கடைகளைத் திறந்து, முதலீடு செய்ய நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள திரு மோடி, “பலதரப்பட்ட அம்சங்கள் குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். குறிப்பாக, இந்தியாவில் இடம்பெற்று வரும் தொழில்நுட்ப உருமாற்றம் குறித்து கலந்தாலோசித்தோம்,” என்றார்.
இந்த வாரம் மும்பையில் ஆப்பிளின் முதல் கடையைத் திறந்துவைத்த திரு குக், புதுடெல்லியில் இரண்டாவது கடை திறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.
வாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களுடனும் ஊழியர்களுடனும் திரு குக் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டார்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட இதர அதிகாரிகளையும் திரு குக் சந்தித்தார்.
இந்தியாவில் உற்பத்தித்துறை, மின்னணுவியல் ஏற்றுமதி, நீடித்த நிலைத்தன்மை, மகளிர் வேலைவாய்ப்பு போன்ற வெவ்வேறு அம்சங்களில் ஆப்பிளின் ஈடுபாட்டை அதிகரிப்பது குறித்து தாங்கள் கலந்தாலோசித்ததாக திரு வைஷ்ணவ் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் ஆப்பிள் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து தாம் நன்னம்பிக்கையுடன் இருப்பதாகச் சொன்னார்.
“ஆப்பிள்-இந்தியா பங்காளித்துவ முயற்சியின் பலனாக முதலீடுகள், வளர்ச்சி, ஏற்றுமதிகள், வேலைவாய்ப்புகள் வரும் ஆண்டுகளில் இருமடங்கு, மும்மடங்காக பெருகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிள் நிறுவனத்தின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்புவதை திரு குக்கின் வருகை குறிக்கிறது. பயனீட்டாளர் சந்தையாகவும் உற்பத்தி மையமாகவும் இந்தியாவிடம் இருக்கும் ஆற்றல்மீது ஆப்பிள் கவனம் செலுத்தி வருவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய திறன்பேசிச் சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் ஆப்பிள் நிறுவனம், மும்பையிலும் புதுடெல்லியிலும் கடைகளைத் திறந்திருப்பது புதிய மைல்கல்லைக் குறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.