முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் ரொக்க நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ள ஏமன் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 78 பேர் இறந்துவிட்டனர்.
இந்த நன்கொடைத் திட்டத்தின்கீழ் 5,000 ஏமன் ரியால் (S$26) பெற்றுக்கொள்ள நூற்றுக்கணக்கானோர் திரண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட இருவர் நேற்று கூறினர்.
“பள்ளிக் கதவு திறந்த உடனேயே, கூட்டத்தினர் ஒருவர் மற்றொருவரை முந்திக்கொண்டு ஓடினர். நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகளில் தடுக்கி சிலர் விழுந்துவிட்டனர்,” என்று மருத்துவ உதவியாளர் ஒருவர் சொன்னார்.
இச்சம்பவத்தில் 77 பேர் காயமுற்றதாக ஹவ்தி சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 13 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில், அந்த நன்கொடை திட்டத்துக்கு ஏற்பாடு செய்த இரு வணிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
போர் சூழ்ந்த ஏமனில், மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கினருக்கு உதவி தேவைப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.