2026ல் ‘நன்கு மூப்படைந்த’ நாடு என்ற நிலையை எட்டவிருக்கும் சிங்கப்பூர்
சமூகத்தில் மூத்தோர் மூப்படையவும் அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுவதில் இருந்து ஓய்வுக்காலத்திற்கு அவர்களிடம் போதுமான சேமிப்பு இருப்பதை உறுதிசெய்வது வரை, நன்கு மூப்படைந்த சமுதாயத்திற்கு சிங்கப்பூர் தயாராகி வருவதாகவும் அவ்வாறு அது தொடர்ந்து செய்யும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறி இருக்கிறார்.
அதிபரின் உரை மீதான விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மூப்படைவதே இந்தத் தலைமுறைக்கான ஆகப் பெரிய சமுதாய உருமாற்றம் என்றார்.
‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ எனப்படும் வருமுன் காக்கும் திட்டத்தை சிங்கப்பூர் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதன்படி, தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க பொதுநல மருத்துவருடன் சேர்ந்து செயல்பட தனிநபர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். வரும் ஜூலையில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
சுகாதாரத் திட்டங்களைப் பொறுத்தமட்டில், அவை மருத்துவ ரீதியிலாக இருப்பதைவிட சமுதாய ரீதியிலாக இருப்பதாக திரு ஓங் கூறினார்.
ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது, சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் செல்வது போன்ற முயற்சிகளை சிலர் சரிவர மேற்கொள்ளாமல் இருக்கலாம். எனினும், சமூக ஆதரவால் இதை எதிர்கொள்ள முடியும்.
“பெரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டிய அடுத்த அம்சம் இது. மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்துக்கு அப்பாற்பட்டு, சமூகப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் நமது சுகாதாரத்திற்கு எது சரியோ அதைச் செய்வதற்கும் மூப்படைவதற்கு ஆதரவளிப்பதற்கும் சுகாதார அமைச்சு முன்னுரிமை அளிக்கும்,” என்று திரு ஓங் விவரித்தார்.
மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இத்திட்டம், அதே அளவுக்கு விரிவாக இருக்கும் என்றார் அவர்.
2017ல் ‘மூப்படைந்த’ நாடு என்ற நிலையை சிங்கப்பூர் எட்டியது. 2026ல் ‘நன்கு மூப்படைந்த’ நாடு என்ற நிலையை அது எட்டவிருக்கிறது. 2030க்குள் நான்கில் ஒருவர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களாக இருப்பர். தற்போது இந்த விகிதம் ஆறில் ஒன்றாக உள்ளது.
மக்கள்தொகை மூப்படைவதை முன்னிட்டு அதற்கான திட்டமிடுதல் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஓய்வுக்கால வயதிலும் மத்திய சேம நிதி முறையிலும் மாற்றங்கள் செய்வது குறித்த யோசனை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, மூப்படைதல் பிரச்சினைகள் தொடர்பான குழுவை அரசாங்கம் அமைத்தது. மூப்படைதலுக்கான அமைச்சர்நிலைக் குழுவாக 2007ல் அது முறைப்படுத்தப்பட்டது.
மூப்படைந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சிங்கப்பூர் அதன் பொருளியலை மாற்றியமைக்க வேண்டும். அதன் பொருட்டு, ஓய்வுக்கால, மறுவேலை நியமன வயது படிப்படியாக உயர்தப்பட்டு வருகிறது. 2030க்குள் இது முறையே 65 மற்றும் 70ஆக உயர்த்தப்படும்.
ஓய்வுக்கால, மறுவேலை நியமன வயதை உயர்த்துவதால், வயது காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதில் இருந்து வயதான ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதாக திரு ஓங் சொன்னார்.
அதேவேளையில், சிங்கப்பூரர்களிடம் ஓய்வுக்காலத்தில் போதுமான சேமிப்பு இருப்பதை உறுதிசெய்யும் அம்சம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
“நகரத் திட்டமிடுதல், பொருளியல் வளர்ச்சி, ஓய்வுக்காலத்தில் போதுமான சேமிப்பு இருப்பது அல்லது சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அம்சங்களில் மூப்படைதலுக்குத் திட்டமிடுவதற்கு முன்கூட்டியே கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியம். அதுவே சிங்கப்பூர் அரசாங்கத்தின் சிறப்பம்சம்,” என்றார் திரு ஓங்.