இந்தியா இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள்தொகையில் சீனாவை விஞ்சிவிடும். இந்த ஆண்டின் நடுப்பகுதி வாக்கில் சீனாவைவிட இந்தியாவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் அதிக மக்கள் வாழ்வார்கள் என்று ஐநா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவர அறிக்கை தெரிவித்து இருக்கிறது.
ஐநா மக்கள்தொகை நிதியம் அமைப்பு தன்னுடைய உலக மக்கள் தொகை அறிக்கை 2023ஐ வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் 1,428.6 மில்லியன் அல்லது 1.4286 பில்லியன் (142.86 கோடி) மக்கள் வசிப்பார்கள். சீன மக்கள்தொகை 1.4257 பில்லியனாக இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறது.
மக்கள்தொகையைப் பொறுத்தவரை அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கும். அந்த நாட்டில் 340 மில்லியன் பேர் வாழ்வார்கள் என்பது கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா இந்த மாதம் சீனாவை கடந்துவிடும் என்று ஏற்கெனவே ஐநா மதிப்பீடுகள் தெரிவித்து இருக்கின்றன.
இருந்தாலும் அந்த மாற்றம் எந்தத் தேதியில் இடம்பெறும் என்பதை இப்போதைய ஆகப் புதிய அறிக்கை தெரியப்படுத்தவில்லை.
இந்தியா, சீனா இரு நாடுகளில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் நிச்சயமில்லாமல் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட தேதியை வரையறுத்துச் சொல்வது சாத்தியமற்றது என்று ஐநா மக்கள் தொகை பிரிவு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டு கழித்து 2021ஆம் ஆண்டு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக அது தாமதமடைந்து இருக்கிறது.
உலகில் மொத்தம் 8.045 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சீனாவிலும் இந்தியாவிலும் வசிப்பார்கள்.
என்றாலும் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள்தொகை வளர்ச்சி மெதுவடைந்து வருகிறது. இந்தியாவைவிட சீனாவில் அந்த வளர்ச்சி குறைவாக இருக்கிறது.
சீனாவில் 60 ஆண்டு காலத்தில் முதன்முதலாக 2022ல் மக்கள் தொகை குறைந்தது. இந்த வரலாற்று முக்கியமான திருப்பம் நீண்டகாலத்திற்குத் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வருடாந்திர மக்கள் தொகைப் பெருக்கம் 2011 முதல் சராசரியாக 1.2% ஆக இருந்து வருகிறது.
இந்த விகிதாச்சாரம் முந்தைய 10 ஆண்டில் 1.7% ஆக இருந்தது என்று இந்திய அரசாங்க புள்ளிவிவரங்கள் கூறின. இதை வைத்துப் பார்க்கையில் மக்கள்தொகைப் பெருக்கம் இந்தியாவில் முந்தைய அளவுக்கு அதிகமாக இல்லை என்று கூறப்படுகிறது.