நீண்டகாலமாக சிங்கப்பூர் பார்த்திராத நடப்பு உலகச் சூழலில் ஐக்கியம் மிக முக்கியம் என்கிறார் பிரதமர்
சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஐக்கியமாக இருந்து வரவேண்டும். சாதனை எழுச்சியை அவர்கள் நிலைநாட்டி வரவேண்டும். உலகில் சிங்கப்பூர் பெற்றிருக்கும் நற்பெயரை அவர்கள் கட்டிக்காக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
சிங்கப்பூர் நீண்ட நெடு நாள்களாக அனுபவித்திராத ஆபத்துமிக்க உலகச் சூழலை இப்போது எதிர்நோக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நாடு தொடர்ந்து ஐக்கியமாக இருந்து வரவேண்டியது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
சிங்கப்பூர் பிளவுபட தன்னை அனுமதித்துவிடக் கூடாது. அதிக மக்கள்தொகை கொண்ட, உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட இதர நாடுகளைப் போல உள்நோக்கிய கண்ணோட்டமும் சிங்கப்பூருக்கு ஒத்துவராது என்று பிரதமர் தெரிவித்தார்.
திரு லீ, நேற்று நாடாளுமன்றத்தில் 50 நிமிடம் உரையாற்றினார். பொருளியல் ரீதியிலும் உத்திபூர்வ முறையிலும் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களையும் அவற்றால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை பற்றியும் திரு லீ விவரித்தார்.
“இந்தோனீசியா, மலேசியா போன்ற பக்கத்து நாடுகளுடன் கூடிய சிங்கப்பூரின் உறவு அணுக்கமானதாக, நிலையானதாக, ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.
“என்றாலும் அதற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையைக் கவனிக்கும்போது அது பிரச்சினை மிகுந்ததாக, ஆபத்தானதாக இருக்கிறது,” என்று திரு லீ எச்சரித்தார்.
“புறச்சூழலின் ஈர்ப்பு விசையை சிங்கப்பூரர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூர் ஒரு புயலை அல்ல, பல புயல்களை எதிர்நோக்கி வருகிறது,” என்று அதிபர் உரை மீதான மூன்றாவது நாள் விவாதத்தின்போது திரு லீ குறிப்பிட்டார்.
உக்ரேன்-ரஷ்யா போர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்து வரும் விரோதப் போக்கு, பலதரப்பு வர்த்தக முறையைக் கீழறுக்கும் தன்னைப்பேணித்தனம் அதிகரிப்பது ஆகியவை அந்தப் புயல்கள் என்றார் திரு லீ.
“கடந்த 60 ஆண்டு காலமாக சிங்கப்பூரர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டுள்ளனர்.
“ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கை கொண்டு, பாதகங்களைச் சாதகங்களாக்கி பல சவால்களைச் சந்தித்து இருக்கிறார்கள்,” என்று கூறிய பிரதமர் லீ, தொடர்ந்து சிங்கப்பூரர்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்றார்.
“பிரச்சினைகளுடன்கூடிய புறச் சூழல்கள் புதிய உளைச்சல்களை உருவாக்கும். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை சிங்கப்பூரர்களைப் பிளவுபடுத்திவிட நாம் அனுமதித்துவிடக்கூடாது,” என்று திரு லீ வலியுறுத்திக் கூறினார்.
“போர் காரணமாக உருவாகி இருக்கும் உயர் பணவீக்கம் பல குடும்பங்களுக்குச் சிரமத்தை உண்டுபண்ணும். குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்கள் பாதிக்கப்படும்.
“சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக உணர்வு ரீதியில் மக்கள் அங்குமிங்கும் இழுக்கப்படலாம். வர்த்தக நெருக்கடிகள் ஏற்படும். ஆதிக்க இயக்கங்கள் இடம்பெறலாம்,” என்று பிரதமர் எச்சரித்தார்.
“வளர்ச்சி நிச்சயமில்லாமல் போகும். உலக வர்த்தக முறை சிதைவதால் அதிக இடையூறுகள் ஏற்படும். இத்தகைய தொல்லைமிகுந்த உலகில் ஒற்றுமையை நாம் கட்டிக்காக்க வேண்டியது நமக்கு மிக முக்கியமானது. பிளவுபட்டால் நமக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்,” என்று திரு லீ எச்சரித்தார்.
“ஐக்கியமாகத் திகழ்வது ஒருபுறம் இருக்க, தற்சார்பு, தொழில் முனைப்பு ஆகிய சாதனை எழுச்சி உணர்வுகளைக் கட்டிக்காத்து நாட்டிற்குச் செல்வச்செழிப்பை நாம் உருவாக்க வேண்டும். பிரச்சினை மிகுந்த உலகில் முடிந்த அளவுக்கு தலைசிறந்த நிலையில் நாம் திகழ வேண்டும்,” என்றார் திரு லீ.
“பெரிய நாடுகள் உள்நோக்கிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க முடியும். அதனால் ஏற்படக்கூடிய விலையைக் கொடுக்கவும் அவற்றால் முடியும். ஆனால் சிறிய தீவு நாடான சிங்கப்பூரால் அதைச் செய்ய முடியாது. உலகத்தோடு தொழில் நடத்துவதைப் பொறுத்துதான் நாம் உயிர்வாழ முடியும்.
“ஆகையால், நாம் எப்போதும் திறந்த நிலையில் இருந்து வரவேண்டும். உலகத்தோடுகூடிய தொடர்புகளைக் கட்டிக்காக்க வேண்டும்.
“உலக நகர் என்ற முறை யிலும் அனைத்துலக மையம் என்ற முறையிலும் மற்றவர்களுக்குப் பயனுள்ள நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வரவேண்டும்,” என்றார் திரு லீ.