அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் 2.7 விழுக்காடு குறைகிறது.
பொருள், சேவை வரி சேர்ப்
பதற்கு முன்பு நாளை முதல் மார்ச் மாதம் 1ஆம் தேதி வரை மின்சாரக் கட்டணம் கிலோவாட்டுக்கு 29.74 காசிலிருந்து 28.95 காசாகக் குறையும் என்று மின்சாரச் சேவை நிறுவனமான எஸ்பி குழுமம் நேற்று தெரிவித்தது.
நாளை முதல் பொருள், சேவை வரி 8 விழுக்காடாக ஏற்றம் காண்கிறது.
எனவே, புதிய மின்சாரக் கட்டணம் கிலோவாட்டுக்கு 31.27 காசு.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நான்கறை வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் பொருள், சேவை வரி சேர்க்காமல் $2.63 குறையும். பொருள், சேவை வரி சேர்த்த பிறகு மின்சாரக் கட்டணம் கிலோ வாட்டுக்கு $1.85 சரியும்.
தற்போது, 33.91 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தினால் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நான்கறை வீட்டின் சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம், பொருள், சேவை வரி சேர்த்த பிறகு $106.25 ஆக இருக்கும்.
இதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு அடுத்த மாதம் $104.40 கட்டணம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணம் அதிகரித்து வந்தது.
இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் அது கிலோவாட்டுக்கு 43 காசு எனச் சற்று குறைந்தது.
உக்ரேன் போர் காரணமாக உலகளாவிய நிலையில் எரிவாயு, எரிபொருள் விலை ஏற்றம் கண்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, சமையல் எரிவாயுக்கான கட்டணம் பொருள், சேவை வரி சேர்க்காமல் கிலோவாட்டுக்கு 89 காசு குறையும் என்று குழாய்வழி சமையல் எரிவாயு வழங்கும் சிட்டி எனர்ஜி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
அதன்படி, நாளை முதல் மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை சமையல் எரிவாயுவின் விலை கிலோவாட்டுக்கு 22.73 காசிலிருந்து 21.84 காசாகக் குறையும்.
பொருள், சேவை வரி சேர்த்து சமையல் எரிவாயுக்கான புதிய கட்டணம் கிலோவாட்டுக்கு 23.59 காசு. முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலை குறைந்திருப்பதால் மின்சாரம், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை குறைவதாக எஸ்பி குழுமமும் சிட்டி எனர்ஜி நிறுவனமும் தெரிவித்தன.
தனது எரிசக்தி செலவு கிலோவாட்டுக்கு 79 காசு குறைந்திருப்பதாக எஸ்பி குழுமம் கூறியது. மின்சார உற்பத்தி நிறுவனங் களுக்கு இந்தத் தொகை செலுத்தப்படுகிறது. எரிபொருள் விலை, மின்சார உற்பத்தி விலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு காலாண்டிலும் எரிசக்தி செலவுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.