3வது காலாண்டில் 50% குடும்பங்கள் அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை
உலகளவில் எண்ணெய், எரிவாயு நெருக்கடி ஏற்பட்டு இருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மூன்று மாத காலத்திற்கு எரிவாயு கட்டணம் ஏறக்குறைய 8% அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட பாதி குடும்பங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலத்திற்குக் கூடுதலாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
மூன்றாவது காலாண்டுக்கான மின்சார கட்டணம், ஜிஎஸ்டி வரியைச் சேர்க்காமல் ஒரு கிலோவாட் மணிக்கு 30.17 காசாக இருக்கும் என்று மின் விற்பனை நிறுவனமான எஸ்பி குழுமம் நேற்று தெரிவித்தது.
இப்போதைய கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு 27.94 காசாக இருக்கிறது. மின்சாரக் கட்டணம் சென்ற ஆண்டு ஏப்ரல் முதலே அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் கட்டண உயர்வு ஒருபுறம் இருக்க, குழாய் மூலம் எரிவாயுவை விநியோகிக்கும் சில்லறை விற்பனை நிறுவனமான 'சிட்டி எனர்ஜி' நிறுவனம், மூன்றாவது காலாண்டில் குடும்பங்களுக்கான எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட் மணிக்கு 23.09 காசாகக் கூடும் என்று அறிவித்தது.
இந்தக் கட்டணம் இப்போது 21.66 காசாக இருக்கிறது. இந்த 1.43 காசு உயர்வு என்பது 6.6% உயர்வுக்கு ஈடானது.
எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகரித்துவிட்டதே கட்டண உயர்வுக்கு காரணம் என்று இந்த இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.
உக்ரேன் பிரச்சினை காரணமாக உலகளவில் எரிவாயு, எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக எரிசக்தி செலவு கூடிவிட்டது என்று எஸ்பி குழுமம் நிறுவனம் நேற்று விளக்கம் அளித்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீட்டில் வசிக்கின்ற, மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய 349 கிலோவாட் மணி மின்சாரத்தைப் பயன்படுத்துகின்ற குடும்பங்களுக்கு ஆகும் மாத சராசரி மின்கட்டணம் ஜிஎஸ்டி வரியை சேர்க்காமல் $8.25 அதிகரிக்கும் என்பதை எஸ்பி குழுமம் நிறுவனம் சுட்டிக்காட்டியது.
பல பிரச்சினைகள் காரணமாக உலகளவில் எரிவாயு விலை சாதனை அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதனால் மின்சார கட்டணம் அதிகரித்துவிட்டது.
குளிர்காலம் வருவதால் மின்சாரத்துக்கான தேவை கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தச் சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து நிலைமையை மோசமாக்கிவிட்டது.
உக்ரேன் போர் காரணமாக எரிபொருளை ஏற்றுமதி செய்ய முடியாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
இதனால் கச்சா எண்ணெய், டீசல், குழாய் எரிவாயு ஆகியவற்றுக்குக் கிராக்கி கூடிவிட்டது.
கச்சா எண்ணெய் நேற்று ஒரு பீப்பாய் விலை $116 ஆக இருந்தது. சென்ற ஆண்டு இதே காலத்தின்போது ஒரு பீப்பாய் விலை ஏறக்குறைய $75 லிருந்து $76 வரை விற்கப்பட்டது.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் 12 மாத காலத்தில் கிட்டத்தட்ட 52% விலை கூடி இருக்கிறது என்பது வர்த்தகர்கள், தரகர்களின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகின்றன. ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மாற்று வழிகளைத் தேட வேண்டிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
இதன் விளைவாக சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் எஞ்சிய பகுதி களுடன் நேரடியான, கடுமையான போட்டி ஏற்பட்டுவிட்டது.
சிங்கப்பூர் தன்னுடைய மின்சாரத் தேவைகளில் ஏறக்குறைய 95 விழுக்காட்டு அளவை நிறைவேற்ற எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.
இதனிடையே, ஐரோப்பிய நாடுகள் மாற்று எரிபொருள் வழிகளை நாடுவதால் ஆசியாவுக்கும் சிங்கப்பூருக்குமான வாய்ப்புகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று சுயேச்சையான எரிசக்தி ஆய்வு தொழில்துறை உத்தி நிறுவனமான 'ரைஸ்டட் எனர்ஜி' என்ற நிறுவனம் தெரிவித்தது.
உலகளவில் விலைவாசி அதிகரிக்கும் சூழலில் சிங்கப்பூரில் குறைந்த வருவாய் குடும்பத்தினருக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் உதவும் வகையில் அரசாங்கம் அண்மையில் $1.5 பில்லியன் ஆதரவுத் திட்டத்தை அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்துக்கும் $100 பயனீட்டு ஈட்டுத் தொகை வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது.