குடியிருப்புச் சொத்துகள் மீதான முதலீட்டில் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் எழுந்திருக்கும் தேவையைக் குறைக்கவே புதிதாக கூடுதல் முத்திரை வரி கொண்டு வரப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து உள்ளார்.
அத்துடன் சிங்கப்பூரர்கள் சொந்த வீட்டில் குடியேறும் வகையில் அவர்கள் வீடு வாங்கு வதற்கு முன்னுரிமை அளிக்கவும் புதிய நடவடிக்கை அமல்படுத்தப்படுவதாக அவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) செய்தியாளர்களிடம் கூறினார்.
உலக அளவிலான பொருளியலின் நிச்சயமற்ற நிலை அதிகரிப்பது சிங்கப்பூரின் வளர்ச்சி வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அண்மையில் எச்சரித்து இருந்ததை அவர் எடுத்துக் கூறினார்.
மேலும், வட்டி விகிதம் உயர்த்தப்படுவது, அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றத்தால் விநியோகத் தொடர் மறுகட்டமைக்கப்படுவது போன்ற நிலவரங்களுக்கு இடையில் ஆணையம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் குடியிருப்புச் சொத்துகளை வாங்கும் வெளிநாட்டினருக்கான கூடுதல் முத்திரை வரியை 30 விழுக்காட்டில் இருந்து 60 விழுக்காட்டுக்கு இரட்டிப்பு செய்வதாக புதன்கிழமை இரவு நிதி அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியன கூட்டாகத் தெரிவித்து இருந்தன.
வரி உயர்வு வியாழக்கிழமை (ஏப்ரல் 27) முதல் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட வரி உயர்வில் இதுவே ஆக அதிகமான உயர்வு. மேலும் சில முத்திரை வரி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரர்கள் இரண்டாவது வீட்டை வாங்கும்போது செலுத்த வேண்டிய கூடுதல் முத்திரை வரி 17 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மூன்றாவது வீட்டை வாங்கும் சிங்கப்பூரர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் முத்திரை வரி உயர்வு 25 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
நிரந்தரவாசிகளுக்கான கூடுதல் முத்திரை வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. நிரந்தரவாசிகள் இரண்டாவது வீட்டை வாங்கும்போது செலுத்த வேண்டிய வரி 25 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காட்டுக்கும் மூன்றாவது வீட்டுக்கான வரி 30 விழுக்காட்டில் இருந்து 35 விழுக்காட்டுக்கும் உயர்த்தப்பட்டு உள்ளன.
தனியார் வீட்டு விலைகள் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 3.2% உயர்ந்தன. இது, முந்திய காலாண்டைக் காட்டிலும் 0.4% அதிகம். 2022ஆம் ஆண்டுக்கான தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், புதிய நடவடிக்கை எல்லா பரிவர்த்தனைகளிலும் கிட்டத்தட்ட 10 விழுக்காடு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு லீ தெரிவித்து உள்ளார்.
“சொத்துச் சந்தை தொடர்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இங்கு வெளிநாட்டவர் மேற்கொள்ளும் சொத்துப் பரிவர்த்தனை விகிதம் பெருமளவு குறைந்துவிட்டது.
“2011ஆம் ஆண்டுவாக்கில் 20 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளாக 3 விழுக்காட்டுக்கும் 4 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட அளவில் சரிந்துவிட்டது. 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான சராசரி சொத்துப் பரிவர்த்தனை விகிதம் 6 விழுக்காடு,” என்று திரு லீ விளக்கினார்.
இருப்பினும், இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட எல்லாப் பரிவர்த்தனைகளிலும் குடியிருப்புச் சொத்து வாங்கிய வெளிநாட்டவர் விகிதம் 7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது, அவர்களின் முத லீட்டு ஆர்வம் குறையவில்லை என்பதையே உணர்த்துவதாக அவர் கூறினார்.