ராமநாதபுரம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஏழு வயதுச் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது ராமநாதபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
பரமக்குடியை அடுத்துள்ள மேலாய்குடி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதற்காக உறியடி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உறியடி நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த கோகுல ராகுல், கபினேஷ் ஆகிய இரு சிறுவர்களும் உறியடி கயிற்றை இழுத்து விளையாடியுள்ளனர்.
அப்போது உறியடி பானையில் கட்டப்பட்டிருந்த கம்பி ஒன்று அருகே இருந்த மின் கம்பத்தில் உள்ள மின்சாரக் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
சகோதரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் கபினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.