சிங்கப்பூர் படகோட்ட வீராங்கனையான சாயிடா அய்சியா இரண்டாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆசிய, ஓஷனிய கண்ட நாடுகளுக்கிடையே சிங்கப்பூருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று அவருக்குக் கிடைத்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 21) ஆசிய, ஓஷனிய கண்டங்களுக்கான தகுதிப்போட்டியில் அய்சியா போதுமான வேகத்தில் படகைச் செலுத்தி ஒலிம்பிக்கிற்கு முன்னேறினார். தென்கொரியாவின் சிங்ஜு நகரின் டாங்கியும் ஏரியில் நடைபெற்ற போட்டியில் இரு துடுப்புகளைக் கொண்டு படகோட்டும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 36 வயது அய்சியா, ஏழு நிமிடங்கள் 59.05 விநாடிகளில் முடித்துத் தகுதிபெற்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறவுள்ளன.