புவனேஸ்வர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள புதிய காற்பந்துக் கழகத்தைத் திறந்து வைத்தார் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான ஆர்சனலின் முன்னாள் நிர்வாகி ஆர்சீன் வெங்கர்.
அகில இந்திய காற்பந்துக் கூட்டமைப்பு, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஆகிய இரண்டும் அக்கழகத்தை நடத்துகின்றன. நாடு முழுவதிலிருந்தும் 14 வயதுக்கு உட்பட்ட 50 இளம் விளையாட்டாளர்கள் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்துகொண்ட வெங்கர், விளையாட்டாளர்கள் சிறந்து விளங்குவதும் அதிக வளர்ச்சியடையாமல் போவதும் காற்பந்துக் கல்வி வழங்கப்படுவதில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
“மூன்று சிறுவர்களை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மும்பையில் பிறந்திருக்கலாம், ஒருவர் சாவ் பாவ்லோ நகரில் பிறந்திருக்கலாம், மற்றொருவர் பாரிஸ் நகரில் பிறந்திருக்கலாம். காற்பந்தைப் பொறுத்தவரை ஒரு நாளுக்குப் பிறகோ ஓர் ஆண்டுக்குப் பிறகோ மூவருக்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியாது. 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களின் விளையாட்டின் தரத்தில் வேறுபாடு தென்படும். அதற்கு ஒரே காரணம்தான், அது காற்பந்துக் கல்வி,” என்றார் வெங்கர். அதை வழங்குவதுதான் புவனேஸ்வரில் அமைந்துள்ள புதிய காற்பந்துக் கழகத்தின் இலக்கு என்றும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் உலகளாவிய காற்பந்து வளர்ச்சிப் பிரிவின் தலைவரான வெங்கர் குறிப்பிட்டார்.
இந்தியக் காற்பந்தைப் பற்றியும் பேசிய அவர், அந்நாட்டில் திறமைக்குப் பஞ்சம் இல்லை என்றும் அது பயன்படுத்தப்படவேண்டும் என்றும் சுட்டினார்.