ரியோ டி ஜெனிரோ: உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது பிரேசில்.
புதன்கிழமை காலை அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடிய பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
ஆட்டம் வரலாற்று புகழ்பெற்ற மரக்கானா விளையாட்டரங்கில் நடந்தது. அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.
அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் பிரேசில் ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதை தடுக்க காவல்துறையினர் களத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆட்டத்தின் முதல் பாதி பரபரப்பாகச் சென்றாலும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் ஒட்டமெண்டி தலையால் முட்டி கோல் அடித்தார்.
பிரேசிலின் ஜோலின்டனுக்கு 82வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அது பிரேசிலுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது. இறுதியில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
தென்னமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்றுப் புள்ளிப்பட்டியலில் தற்போது பிரேசில் ஏழு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனிவரும் ஆட்டங்களில் அது கவனமாக ஆடத்தவறினால் அதன் உலகக் கிண்ண வாய்ப்பு பறிபோகக்கூடும்.
புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது அர்ஜென்டினா.