லண்டன்: இங்கிலிஷ் பிரிமிர் லீக் காற்பந்தில் செல்சியும் நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டியும் ஞாயிற்றுக்கிழமையன்று மோதவுள்ளன.
இவ்விரு குழுக்களும் தன்னம்பிக்கையின் உச்சியில் இருந்தபடி இந்த ஆட்டத்தில் களமிறங்குகின்றன.
டாட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான சென்ற லீக் ஆட்டத்தில் செல்சி 4-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. அந்த ஆட்டத்தில் பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் இடம்பெற்றபோதும் அதுவரை லீக்கில் தோற்காமல் இருந்த ஸ்பர்சை, செல்சி அதிரவைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த லீக் பருவத்தைப் பெரும் தடுமாற்றத்துடன் தொடங்கிய செல்சி கடந்த சில வாரங்களாக நன்கு மீண்டு வந்துள்ளது.
எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்பு செல்சி பிரென்ட்ஃபர்ட்டிடம் தோல்வியுற்றது. அதனால் செல்சி எந்நேரமும் பழையபடியே சிரமப்படக்கூடும் என்ற உணர்வு சிலரிடையே உள்ளது.
சிட்டிக்கு எதிரான ஆட்டம் செல்சியின் ஆற்றலைச் சோதிக்கும் ஒன்றாக அமையலாம்.
என்றும்போல் சிட்டி வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதன் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் கோல்களை விளாசி வருகிறார்.
பிரிமியர் லீக், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு போட்டிகளிலும் சிட்டி அசத்தி வருகிறது. இப்படிப்பட்ட குழுவை வெல்லவிடாமல் பார்த்துக்கொள்வது செல்சிக்குப் பெரும் சவாலாக இருக்கலாம்.
அதே வேளையில் லீக்கில் ஆர்சனல், வுல்வ்ஸ் ஆகிய இரு குழுக்களும் இப்பருவத்தில் சிட்டியை வென்றன. அதிலும் வுல்வ்ஸ், சிட்டியை வென்றது எதிர்பார்ப்புகளுக்கு மாறானது.
அந்த இரு ஆட்டங்களையும் ஆராய்ந்து உகந்த உத்திகளைக் கையாண்டு சிட்டியை வெல்லும் முயற்சியில் செல்சி இறங்கக்கூடும். சென்ற பருவத்தில் படுமோசமாக விளையாடிய பிறகு இப்பருவத்தில் மீண்டும் சிறந்த அணியாக உருவெடுக்கும் இலக்குடன் உள்ளது செல்சி.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லிவர்பூல், பிரென்ட்ஃபர்டைச் சந்திக்கிறது. சென்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல், எதிர்பாரா விதமாக லூட்டன் டவுனிடம் தோல்வியடையும் விளிம்பிலிருந்து மீண்டுவந்து சமநிலை கண்டது.