லண்டன்: இந்தப் பருவத்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் வெற்றி நடையை முடிவுக்கு கொண்டு வந்தது செல்சி.
திங்கட்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் செல்சி அணியிடம் 1- 4 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது ஸ்பர்ஸ்.
இருப்பினும் 33வது நிமிடத்தில் அவ்வணியின் கிறிஸ்டியன் ரொமெரோக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் 33வது நிமிடத்தில் பெனால்டி முறையில் செல்சி முதல் கோலைப் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது.
ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஸ்பர்சின் உடோகிக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. அதனால் 9 வீரர்களுடன் களத்தில் தடுமாறியது ஸ்பர்ஸ்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட செல்சியின் நிக்கலஸ் ஜாக்சன் 75, 91, 94 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன் மூலம் இந்தப் பருவத்தில் முதல்முறையாக ஸ்பர்ஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது.
மேலும் புள்ளிப்பட்டியலில் ஸ்பர்ஸ் குழு இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டது.
மான்செஸ்டர் சிட்டி 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 26 புள்ளிகளுடன் ஸ்பர்ஸ் இரண்டாம் இடத்திலும் 24 புள்ளிகளுடன் லிவர்பூல் மூன்றாம் இடத்திலும் உள்ளன.