சென்னை: இந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
அதே தன்னம்பிக்கையுடன் திங்கட்கிழமை பாகிஸ்தானுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் மீண்டும் வெற்றிக் கனியைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஒருநாள் போட்டியில் தோற்கடித்து பேரதிர்ச்சி தந்துள்ளது ஆப்கானிஸ்தான்.
இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பல முன்னேற்றத்தை தரப்போவதாக அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் ஜானத்தன் டிராட் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு உத்வேகத்தைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் விளையாடிய ஆட்டம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் அழியாத நினைவாக இருக்கும் என்று டிராட் கூறினார்.
இலக்கை சிறப்பாக விரட்டிய பந்தடிப்பாளர்களுக்கும் தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
50 ஓவர்களில் 38 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசினர். ஆடுகளம் ஓரளவுதான் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் கட்டுப்பாடுடன் பந்து வீசி ஓட்டங்களை குறைத்தனர்.
கடினமான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானுக்கு தொடக்கநிலை ஆட்டக்காரர்களான குர்பாசும் இப்ராஹிம் சட்ரானும் சிறப்பான துவக்கம் தந்தனர்.
அதிரடியாக ஆடிய குர்பாஸ் 65 ஓட்டங்கள் குவித்தார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய சட்ரான் 87 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன்பின்னர் வந்த அணித்தலைவர் ஷாஹிடி (48), ரஹ்மட் (77) ஓட்டங்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர்.
இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் மூன்றில் தோல்வி இரண்டில் வெற்றிபெற்றுள்ளது.
அடுத்து பூனேவில் இலங்கையுடன் மோதவுள்ளது ஆப்கானிஸ்தான்.
பாகிஸ்தானுடன் வெற்றிபெற்ற உற்சாகத்தைக் கொண்டு இலங்கையை எதிர்கொள்ளவிருப்பதாக டிராட் தெரிவித்தார்.
செய்வது அறியாது நிற்கும் பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதேநேரம் களக்காப்பும் மிக மோசமாக இருந்து. எளிதான பந்துகளையும் கோட்டைவிட்டனர் பாகிஸ்தான் வீரர்கள்.
21 ஓவர்கள் பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தத் தவறினர்.
இந்த உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் நடுப்பகுதிகளில் பாகிஸ்தான், பந்துவீச்சில் பரிதாபமாகக் காணப்படுவதாக கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
அடுத்து மீண்டும் சென்னையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.
இந்த ஆட்டத்தில் வெல்லத் தவறினால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு குறையும்.