சென்னை: அறிவார்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நகரம் சென்னை என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணிகள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே மற்ற நகர்களில் ரசிகர்கள் பாராட்டுவது வழக்கம்.
ஆனால், எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அதற்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்யும் பழக்கம் சென்னை ரசிகர்களிடம் இருக்கிறது.
நடப்பு உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடாத ஆட்டங்களைக் காண ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதில்லை.
ஆனால், சென்னையில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களிலுமே நல்ல ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணி இடம்பெற்ற ஆட்டத்தில் அந்த அணிக்கு மனக்கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை மறக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பாகிஸ்தான் அணிச் சீருடையை அணிந்திருந்தனர். அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்ட போதெல்லாம் சென்னை ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
இதற்குக் கைமாறாக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் போட்டி முடிந்ததும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மைதானத்தைச் சுற்றி வந்து கைதட்டினர்.
அப்போது சென்னை ரசிகர்களும் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு உரிய மரியாதை செலுத்தினர். இதைப் பார்க்கும்போது, 1999ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று எப்படி மைதானத்தைச் சுற்றி வந்தார்களோ, அதேபோல ஆப்கானிஸ்தான் அணியினரும் இம்முறை செய்துள்ளனர்.
சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு மரியாதை செய்யக் கூடியவர்கள் என்று இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.