பிரசல்ஸ்: பெல்ஜியம் அணியும் சுவீடன் அணியும் திங்கட்கிழமை இரவு யூரோ 2024 காற்பந்து கிண்ணத்திற்கான தகுதி ஆட்டத்தில் விளையாடின.
ஆட்டத்தின் முதற்பாதி முடிந்தவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டம் கைவிடப்பட்டது.
திங்கட்கிழமை மாலை பிரசல்ஸில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருவரை தாம் தான் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் காணொளி மூலம் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டார். தாம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனால் பெல்ஜியம் முழுவதும் பாதுகாப்பு நிலை உச்சநிலைக்கு உயர்த்தப்பட்டது.
ஆட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த தகவல் வெளியானது.
அதன் பின்னர் அதிகாரிகள் ஆட்டத்தைப் பாதியிலேயே கைவிட முடிவெடுத்தனர்.
ஆட்டம் நிறுத்தப்படும் போது இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கவிருக்கும் யூரோ 2024 காற்பந்து கிண்ணத்திற்கு பெல்ஜியம் அணி ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது. சுவீடன் தகுதிபெற தவறியது.