இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி 14ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள வேளையில் சிங்கப்பூரில் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
பொதுவாகவே அதிக ஆரவாரத்தோடு நடைபெறும் போட்டியில் இம்முறையும் பல எதிர்பார்ப்புகள். காரணம், 2016க்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா சென்றிருப்பது இதுவே முதன்முறை.
2019ல் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக அந்நாடுகளின் அரசியல், பொருளியல் உறவுகள் பாதிக்கப்பட்டன. 2021ல் போர்நிறுத்தத்திற்குப் பிறகுதான் அவை மேம்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்கள் எங்கு காணவுள்ளனர்?
கப்பல்துறையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியரான மணிகண்டன், 29, “எங்கள் அறையிலேயே கைப்பேசியில் பார்ப்போம். காரணம், போட்டி இரவில் முடிந்தால் வீடு திரும்புவது கடினமாகிவிடும்,” என்றார்.
“குடியிருப்பாளர் குழுக்களில் ஆட்டத்தை ஒளிபரப்பினால் பெரும்பாலும் அங்கு செல்வோம்,” என்றார் அவர்.
மேலும் சில வெளிநாட்டு ஊழியர்களும் வீட்டிலிருந்து கைப்பேசியில் ஆட்டத்தைக் காணவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
யுவன் இசை ரசிகர்களுக்குக்கான சோதனை
சிங்கப்பூர் தேசிய உள்ளரங்க கிரிக்கெட் விளையாட்டாளர் ஹரிஹரன், 32, கிரிக்கெட் போட்டி நடைபெறும் அதே நேரத்தில் சிங்கப்பூரில் நடக்கும் யுவன் இசை நிகழ்ச்சிக்குச் செல்லவுள்ளார்.
“கைப்பேசியில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டே யுவன் இசையைக் கேட்கவுள்ளேன்,” என்றார் அவர்.
ஆட்டங்களைக் காண ‘கிரிக்ஹெச்டி.நெட்’ சேவைக்குப் பதிவுசெய்துள்ளார் அவர்.
“இந்தியாவிற்கு விராத் கோஹ்லி முக்கியப் பங்கு வகிப்பார். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா இல்லாத நிலையில், ஷகீன் ஷா அஃப்ரிடி தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்துவது முக்கியம்,” என்றும் தெரிவித்தார்.
ஆட்டத்தை எங்கு காணலாம்?
சிங்கப்பூரில் பல உணவகங்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை நேரடியாக ஒளிபரப்ப உள்ளன.
‘விவா லோகா’ சாங்கி சிட்டி பாயிண்ட் தொகுதியில் (#01-68/69) பெரிய திரைகளில் ஆட்டம் ஒளிபரப்பாகும். 400க்கும் மேற்பட்டோர் இதனைக் காணலாம்.
‘லிட்டில் இந்தியா’வின் ‘அர்ப்பணம்’ பெரிய திரையில் போட்டியை ஒளிபரப்பும். இலவச நுழைவுக்கு https://arpanam.com.sg/events இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம். ‘பம்பாய்த் தோட்டம்’, ‘பிரிட்டிஷ் இந்தியா கறி ஹட்’ உணவகங்களிலும் இந்தப் போட்டி ஒளிபரப்பப்பட உள்ளது.