லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து திணறி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் குழுவிற்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் ஆர்சனல் கோல் அடித்தது.
எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் குழுவிடம் தோல்வியடைந்ததால் அதன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு முன்னர், செப்டம்பர் 30ஆம் தேதி உல்வர்ஹேம்ப்டன் குழுவிற்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
தற்போது மான்செஸ்டர் சிட்டி 18 புள்ளிகளுடன் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், “ஆர்சனலுக்கு எதிராகத் தோற்றதால் உலகம் தலைகீழாக மாறிவிடவில்லை. நிச்சயம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்,” என்று சிட்டியின் மத்தியத் திடல் ஆட்டக்காரர் பெர்னார்டோ சில்வா தெரிவித்துள்ளார்.
“கடந்த பருவத்தைப் போலவே இம்முறையும் முன்னேற வேண்டிய இடங்களில் முன்னேற்றம் காண்போம். இனி வரும் ஆட்டங்கள் கடுமையாக இருக்கும். அதனால், தற்போது மனரீதியாகவும் உடல் தியாகவும் ஓய்வு தேவை என்றும் சில்வா கூறியுள்ளார்.
அடுத்ததாக, சிட்டி குழு அக்டோபர் 21ஆம் தேதி பிரைட்டன் குழுவையும் 29ஆம் தேதி அதன் பரம வைரி மான்செஸ்டர் யுனைடெட் குழுவையும் எதிர்த்தாடவுள்ளது.
இந்நிலையில், சிட்டி குழு விரைவில் மீண்டெழும் என்று அதன் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தற்போது பட்டியலில் 20 புள்ளிகளுடன் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் முதலிடத்தில் உள்ளது.
அதே புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல் இரண்டாவது இடத்தில் உள்ளது.
லிவர்பூல் 17 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து ஆட்டங்கள் இடம்பெறும் என்பதால் புள்ளிப்பட்டியலில் அணிகளின் நிலை தொடர்ந்து மாறக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.