நெதர்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டிம் டெ லீடைப் பொறுத்தவரை, இந்தியா அவரது நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழ்கிறது.
இந்தியாவில் 1996ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற நெதர்லாந்து அணியில் இடம்பெற்றிருந்தார் டிம் டெ லீட். அப்போது, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் தமது பந்துவீச்சின்மூலம் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட நான்கு ஆட்டக்காரர்களை வெளியேற்றினார்.
இந்நிலையில், 27 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இந்தியா சென்றுள்ளார் டிம். ஆனால், இம்முறை ஓர் ஆட்டக்காரராக இல்லாமல், தம் மகனின் ஆட்டத்தைக் காண்பதற்காக!
ஆம்! டிம் டெ லீடின் மகன் பஸ் டெ லீட் இம்முறை நெதர்லாந்து அணிக்காகக் களமிறங்கியுள்ளார். தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி, இறுதி பத்து அணிகளில் ஒன்றாக நெதர்லாந்து நுழைய முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் பஸ். ஸ்காட்லாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்ததோடு, சதம் விளாசியும் அவர் வியக்க வைத்தார்.