ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளில் சுவர்ப்பந்துப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது இந்தியா.
இந்தியாவின் தீபிகா பல்லிகல் கார்த்திக், ஹரிந்தர் சிங் சந்து இருவரும் தங்கம் வென்றனர். இறுதிச் சுற்றில் இருவரும் 11-10, 11-10 எனும் ஆட்டக்கணக்கில் மலேசியாவின் அய்ஃபா பின்டி அஸ்மான், சியாஃபிக் கமால் ஆகியோரை வென்றனர்.
35 நிமிடங்களில் அவர்கள் வெற்றிகண்டனர்.
இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் சுவர்ப்பந்துப் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
முன்னதாக இந்தியாவின் ஆண்கள் அணி பாகிஸ்தானை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. கலப்பு இரட்டையர், பெண்கள் குழுப் பிரிவுகளில் இந்தியா வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இந்த ஆசிய விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிக பதக்கங்களைக் கைப்பற்றிவிட்டது இந்தியா. முன்னதாக அதிகபட்சம் 70 பதக்கங்களை வென்ற அது, இம்முறை நான்கு நாள்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே அதை விஞ்சியது.