சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பி.டி. உஷாவின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை சமன் செய்துள்ளார்.
அதே சமயத்தில் மயிரிழையில் அந்தச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தமிழக வீராங்கனை நழுவவிட்டுள்ளார்.
மகளிருக்கான 400 மீட்டர் தடையோட்டப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தில் 55.42 வினாடிகளில் கடந்து, பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சீனாவின் ஹாங்ஜோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் திங்கட்கிழமை காலை மகளிருக்கான 400 மீட்டர் தடையோட்டப் போட்டி நடைபெற்றது.
இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பங்கேற்றார்.
இறுதிப்போட்டிக்கு முன்பு நடைபெற்ற தகுதிச் சுற்றில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து வித்யா ராம்ராஜ் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் முந்தைய இந்திய வீராங்கனையான பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.டி. உஷா 400 மீட்டர் தடையோட்டப் போட்டியில் 55.42 வினாடிகளில் கடந்தார்.
இந்திய வீராங்கனைகளில் பி.டி. உஷாவின் இந்த ஓட்டமே இதுவரை சாதனையாக இருந்தது.
இதனை தமிழக வீராங்கனை வித்யா சமன் செய்துள்ளார்.
இவருக்கு பிடி உஷாவின் சாதனையை தகர்க்க இன்னொரு வாய்ப்பு உள்ளது.
இன்று நடக்கவுள்ள 400 மீட்டர் தடையோட்டப் போட்டிக்கான இறுதிச்சுற்றுக்கு வித்யா ராம்ராஜ் முன்னேறியுள்ளார்.
இதனால், புதிய சாதனையை வித்யா ராம்ராஜ் நிகழ்த்துவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ், தடகளத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இவரது சகோதரி நித்யா, இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் தடையோட்டப் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஒரே வீட்டில் உள்ள சகோதரிகள் இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.