லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ) காற்பந்துக் குழுவுக்காக விளையாடிவரும் மேசன் கிரீன்வுட், அக்குழுவிலிருந்து விலகுவதாக திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அந்த விவகாரத்தில் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து மேன்யூவில் இருந்து கிரீன்வுட் வெளியேறுகிறார்.
சமூக ஊடகங்களில் கிரீன்வுட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மேன்யூவுக்காக விளையாட 2022 ஜனவரியில் அவருக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்வாண்டு நவம்பர் 27ஆம் தேதி கிரீன்வுட் வழக்கு விசாரணை கோரவிருந்தார். ஆனால், தம்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் கடந்த பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.