புடாபெஸ்ட்: ஆசிய வெற்றியாளரான சிங்கப்பூரின் சாந்தி பெரேரா உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்ட்டில் உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகள் நடந்து வருகின்றன.
அதில் 200 மீட்டர் ஓட்டத்தின் மூன்றாவது தகுதிச்சுற்றில் ஓடிய சாந்தி, 22.57 நொடிகளில் இரண்டாமிடம் பிடித்தார். நடப்பு வெற்றியாளரான ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 22.51 நொடிகளில் முதலாவதாக எல்லைக்கோட்டைக் கடந்தார்.
இதன்மூலம் புதிய தேசிய சாதனை படைத்த சாந்தி, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிநேரத்தையும் தொட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக் 200 மீ. ஓட்டப் பந்தயத்திற்கான தகுதி நேரமும் 22.57 நொடிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 22.69 நொடிகளில் தங்கம் வென்றதுதான் சாந்தியின் முன்னைய சாதனை நேரம்.
உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் நான்காவது முறையாகப் பங்கேற்றுள்ள சாந்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பது இதுவே முதன்முறை.
மொத்தம் 44 வீராங்கனைகள் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற நிலையில், சாந்தி 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அரையிறுதிச் சுற்று வியாழக்கிழமை (சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) இடம்பெறும்.
உலகத் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதிவரை நடைபெறும் உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளின் 100 மீ., 200 மீ., ஓட்டப் பந்தயங்களுக்கு சாந்தி தகுதிபெற்றார்.
குறைந்தது 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் பெருமையை ஈட்டிய முதல் சிங்கப்பூரர் இவர்தான்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, 100 மீட்டர் ஓட்டத்தில் தமது தேசிய சாதனையை ஆறு முறையும் 200 மீட்டர் ஓட்டத்தில் தமது தேசிய சாதனையை நான்கு முறையும் இவர் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டில் இவ்விரு பந்தயங்களிலும் ஆசிய அளவில் அதிவேக ஓட்டக்காரர் சாந்திதான். அதனால், சீனாவின் ஹாங்ஜோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி, பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.