பாரிஸ்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் முக்கிய ஆட்டக்காரரான கிலியன் எம்பாப்பே தமது உச்ச ஆட்டத்திறனை மீட்டெடுத்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கெதிராக வெள்ளிக்கிழமை நடந்த யூரோ 2024 காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டத்தில், எம்பாப்பே இரண்டு கோல்களை அடிக்க, பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்மூலம், அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஜெர்மனியில் நடக்கவுள்ள யூரோ கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு பிரான்ஸ் முன்னேறியது.
கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாட்டம் வரை முன்னேறி, அர்ஜெண்டினாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்த பிரான்ஸ், யூரோ 2024 தகுதிச் சுற்றில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
மீண்டும் கோல் பாதைக்குத் திரும்பியதால் நிம்மதி அடைந்துள்ளார் எம்பாப்பே.
இந்த ஆட்டத்திற்குமுன், கடைசியாக இவர் ஆடிய நான்கு அனைத்துலக ஆட்டங்களிலும் கோலடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் கவலைப்படவே இல்லை, குறிப்பாக கிலியனைப் பற்றி. கவலைப்படத் தேவையில்லை என்பதை இந்த ஆட்டத்தில் அவர் காட்டிவிட்டார்,” என்று சொன்னார் பிரெஞ்சுக் காற்பந்து அணியின் பயிற்றுநர் டிடியே டேஷோம்.
‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அவ்வணி, இதுவரை ஆடிய ஆறு ஆட்டங்களிலும் வாகை சூடியது.
அதேபோல, ‘ஜே’ பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகலும் இதுவரை தான் ஆடிய ஏழு ஆட்டங்களிலும் வென்று, யூரோ இறுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெற்றது.
வெள்ளிக்கிழமை நடந்த தகுதிச் சுற்று ஆட்டத்தில், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவைத் தோற்கடித்தது. அவ்வணியின் கோன்சாலோ ராமோஸ் ஒரு கோலை அடிக்க, மற்ற இரு கோல்களையும் போட்டார் அவ்வணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இறுதிச் சுற்றில் மொத்தமுள்ள 24 இடங்களுக்கு 53 அணிகள் போட்டியிடுகின்றன. போட்டிகளை ஏற்று நடத்தும் ஜெர்மனியுடன் பிரான்ஸ், போர்ச்சுகல், பெல்ஜியம் என நான்கு அணிகள் இப்போதே முன்னேறிவிட்டன.