துபாய்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், அப்போட்டித் தொடரில் பங்குபெறும் 20 அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டன. டி20 உலகக் கிண்ணத் தொடரில் 20 அணிகள் விளையாடுவது இதுவே முதன்முறை.
போட்டியை நடத்தும் நாடுகள் என்ற வகையில் அமெரிக்காவும் வெஸ்ட் இண்டீசும் அப்போட்டிகளில் விளையாடத் தகுதிபெற்றுள்ளன. கடந்த 2022 டி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் எட்டு அணிகளைப் பிடித்த அணிகளும் டி20 தரவரிசையில் அடுத்த இரு சிறந்த அணிகளும் ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டன.
அதன்பின், அமெரிக்கா (1), ஆசியா (2), கிழக்கு ஆசிய பசிபிக் (1), ஐரோப்பா (2), ஆப்பிரிக்கா (2) எனத் தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் மேலும் எட்டு அணிகள் தகுதிபெற்றுள்ளன.
பிரிவிற்கு ஐந்து அணிகள் என நான்கு பிரிவுகளாக அவ்வணிகள் போட்டியிடும். அப்பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறும். ‘சூப்பர் 8’ சுற்றிலும் பிரிவிற்கு நான்கு அணிகள் என இரு பிரிவுகள் இடம்பெறும். அப்பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்.
20 அணிகள்: அமெரிக்கா, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, உகாண்டா, ஓமான், கனடா, தென்னாப்பிரிக்கா, பங்ளாதேஷ், பப்புவா நியூ கினி, பாகிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, நேப்பாளம், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து.