விண்ட்ஹோக் (நமீபியா): அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் அமெரிக்காவிலும் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உகாண்டா தகுதி பெற்றுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் உகாண்டா விளையாடவிருப்பது இதுவே முதன்முறை.
ஆப்பிரிக்க வட்டார தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிக்கிழமை ருவாண்டாவை வென்றதன்மூலம் புள்ளிப் பட்டியலில் உகாண்டா இரண்டாமிடம் பிடித்தது. முதலில் பந்தடித்த ருவாண்டா 18.5 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதன்பின் பந்தடித்த உகாண்டா, 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.
முன்னதாக, பட்டியலில் முதலிடம் பிடித்து, நமீபியா அணியும் 2024 டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னேறியது.
தனது கடைசி தகுதிச் சுற்று ஆட்டத்தில் கென்யாவை 110 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தும் ஸிம்பாப்வே அணியால் முன்னேற முடியவில்லை. முன்னதாக, நமீபியாவிடமும் உகாண்டாவிடமும் அது மண்ணைக் கவ்வியதால் பட்டியலில் மூன்றாமிடத்தையே பிடிக்க முடிந்தது.
ஆப்பிரிக்க வட்டார தகுதிச் சுற்றுப் போட்டியில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன.
முன்னதாக, 2019, 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறாத ஸிம்பாப்வே அணி, தற்போது 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் பறிகொடுத்துள்ளது.