ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மகளிர்க்கான 100 மீ, தடையோட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, போட்டியைத் தவறாகத் தொடங்கியதாகக் கூறி, சீன வீராங்கனை வு யானியுடன் சேர்த்து ஜோதியையும் தகுதிநீக்கம் செய்ய நடுவர்கள் முயன்றது குறிப்பிடத்தக்கது.
பந்தயம் தொடங்குவதற்கான அறிவிப்பு ஒலி எழுப்பப்படுமுன், வு யானி ஓடத் தொடங்கினார். அதன்பிறகே ஜோதி ஓடத் தொடங்கினார்.
ஆனால், இருவரும் தவறிழைத்ததாகக் கூறி, இருவரையும் தகுதிநீக்கம் செய்வதாக நடுவர் சிவப்பு அட்டை காட்டினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜோதி, ‘இது அநியாயம்’ என்று சொல்லி, நடுவர்களிடம் முறையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் ஓட அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டத்தில் சீன வீராங்கனைகள் லின் யுவெய், வு யானி முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனர். ஜோதி மூன்றாவதாக வந்தார்.
போட்டி முடிந்ததும் இந்திய அதிகாரிகள், சீன வீராங்கனை வு யானியைப் பந்தயத்தில் அனுமதித்தது தொடர்பில் முறையிட்டனர்.
தீர ஆராய்ந்த பிறகு, வு யானி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், ஜோதியின் பதக்கம் வெள்ளியாக மாறியது. நான்காவதாக வந்த ஜப்பானிய வீராங்கனைக்கு வெண்கலம் கிடைத்தது.
சம்பவம் குறித்து முன்னாள் இந்தியத் திடல்தட வீராங்கனையும் இந்தியத் திடல்தடக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவருமான அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், “ஒரு திடல்தட விளையாட்டாளராக, என் வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வைக் கண்டதில்லை. ஒருவரைத் தகுதிநீக்கம் செய்தபின் அவரை மீண்டும் அனுமதிக்கின்றனர்.
“அவர்கள் ஜோதியையும் தகுதிநீக்கம் செய்ய முயன்றதுதான் கொடுமை. சீன வீராங்கனை ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைத்த நிலையிலும் ஜோதியின் கைகள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அதனால், போட்டி முடிந்ததும் உடனடியாக முறையிட்டோம்,” என்று விளக்கினார்.
இதன் காரணமாக, இறுதியில் அதிகாரிகள் சரியான முடிவை எடுத்தனர்.
இதுபற்றிக் கருத்துரைத்த ஜோதி, “எனக்கு விதிமுறைகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால், நான் பந்தயத்தைத் தவறாகத் தொடங்கவில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன்,” என்றார்.
எப்படியாயினும், இந்த ஒட்டுமொத்த நாடகத்தால் ஜோதி பாதிக்கப்பட்டு, அவரால் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி ஓட முடியாமல் போயிருக்கலாம் என்று கூறப்பட்டது.