தங்களின் $1.5 மில்லியன் வாழ்நாள் சேமிப்புக்காக 80 வயது மதிக்கத்தக்க முன்னாள் காதல் ஜோடி உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் மோதினர்.
மாது வங்கியில் பணிபுரிந்தபோது 1971ஆம் ஆண்டு இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்து 1976ல் இருவரும் சேர்ந்து வாங்கிய வீட்டில் குடியேறினர்.
இருப்பினும், சென்னட் எஸ்டேட் வட்டாரத்தில் இருந்த அந்தக் காதலர்களின் வீட்டு வாசலில் அந்த ஆடவரின் மனைவியும் பிள்ளைகளும் நின்றபோதுதான் உண்மை அம்பலமானது, காதல் கசந்தது.
இருப்பினும், அனைவரும் சில ஆண்டுகளுக்கு ஒரே கூரையின்கீழ் அனுசரித்து வாழ்ந்தனர்.
2020ஆம் ஆண்டு அந்தக் காதலி அனைத்தையும் முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். இருவரது கூட்டு வங்கிக் கணக்கில் இருந்த சுமார் $1.5 மில்லியனில் பாதித் தொகையை அவர் எடுத்துக்கொண்டார்.
இதை நம்பிக்கை துரோகம் என்று கருதிய ஆடவர், அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறித் தன் முன்னாள் காதலி மீது வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. திருமணமாகாத நிலையிலும் தம்பதியர் பகிர்ந்துகொண்ட சொத்துகளில் இருதரப்புக்கும் உரிமை உண்டு என்று அது விளக்கியது.
ஆடவரின் முன்னாள் காதலி நேரடியாகவும் மறைமுகமாகவும் வருமானத்திற்குப் பங்களித்ததைச் சட்டம் புறக்கணிக்க முடியாது என்று கூறப்பட்டது.