தெலுக் பிளாங்காவில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை (ஜனவரி 13) தீ மூண்டது.
இதனையடுத்து, இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; கிட்டத்தட்ட 60 பேர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தெலுக் பிளாங்கா டிரைவ், புளோக் 44ல் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 3.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாம் தளத்திலுள்ள ஒரு வீட்டின் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாகக் கூறப்பட்டது. அதனையடுத்து, தீயணைப்பாளர்கள் நீரைப் பீய்ச்சியடித்து ஐந்து நிமிடங்களில் தீயை அணைத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் சொன்னார்.
காவல்துறை துணையுடன் அண்டை வீடுகளில் வசித்த கிட்டத்தட்ட 60 பேர் அந்த புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடுவோர்.
குடிமைத் தற்காப்புப் படையினர் வரும் முன்னரே, தீப்பிடித்த வீட்டிலிருந்து எழுவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கும் அண்டை வீட்டார் ஒருவருக்கும் புகையைச் சுவாசித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவ்விருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.