மூன்று மாணவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக முன்னாள் தொடக்கப் பள்ளி ஆசிரியருக்குத் திங்கட்கிழமை எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொண்டது, இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அந்த 48 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீது சுமத்தப்பட்ட மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர் இந்தக் குற்றத்தை 1993ஆம் ஆண்டுக்கும் 1994ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவர் தனது பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் ஒரு லாப நோக்கமில்லா அமைப்பில் தொண்டூழியராகப் பணியாற்றியபோது தன்னிடம் பாடம் படிக்க வந்த மூன்று சிறுவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றி 2019ஆம் ஆண்டுவரை யாரிடமும் தெரிவிக்கவில்லை.
பாலியல் வன்கொடுமைகள் பற்றி நாளிதழ்களில் படித்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தான் சிறுவனாக இருந்தபோது அனுபவித்த கொடுமை பற்றிக் காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்ததாகச் சொல்லப்பட்டது.