தைப்பே: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கை விட்டுக் கிளம்பியதும் தைவான், சீனாவைப் பிரிக்கும் தைவான் நீரிணையின் நடுப்பகுதியைத் தாண்டி சீனா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கெண்டதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதில் ஏப்ரல் 27ஆம் தேதி 12 சீன ராணுவ போர் விமானங்கள் தைவான் நீரிணையின் நடுப்பகுதியை தாண்டியதாக தைவான் கூறியது.
அமெரிக்கா, தைவானுக்கு இடையே அதிகாரபூர்வ அரசதந்திர உறவுகள் இல்லை. ஆனால், தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
இதன் தொடர்பில் தைவான் நீரிணையில் அமைதி, நிலைத்தன்மையை கட்டிக்காப்பது முக்கியமானது எனத் தான் சீனத் தலைவர்களிடம் வலியுறுத்தியதாக திரு பிளிங்கன் தெரிவித்தார்.
ஜனநாயக ஆட்சி முறையில் செயல்படும் நாடான தைவான் அண்மைய காலத்தில் அதிகரித்த ராணுவ நெருக்கடியை சீனாவிடமிருந்து சந்தித்து வருகிறது. சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறிவரும் நிலையில், அதை தைவான் நிராகரித்து வருகிறது.
ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9,30 மணியிலிருந்து தனது ஆகாயப் பகுதியில் 22 சீன போர் விமானங்கள் ஊடுருவியதாக தைவான் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் தைவான் நீரிணையின் நடுப்பகுதி இருநாடுகளுக்கு இடையேயான அதிகாரபூர்வமற்ற எல்லைக் கோடாகக் கருதப்பட்டு இரு நாட்டு ராணுவங்களும் அதைத் தாண்டாத வண்ணம் இருந்தன. ஆனால், சீனப் போர் விமானங்கள் அண்மைய காலங்களில் அந்த எல்லைக்கோட்டை அடிக்கடி தாண்டி தைவானின் ஆகாய வெளியில் ஊடுருவுகின்றன. இதுபற்றி சீனா, தான் அந்த எல்லைக் கோட்டை அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளது.