சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
ஜாங் தனது குற்றத்தை ஏப்ரல் 30ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜாங்மீது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியை ஏமாற்றுவதற்காக போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புதிய குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.
$36 மில்லியன் பணத்தை வைத்திருந்ததாக ஜாங்மீது நான்கு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தப் பணம் குற்றச்செயலில் ஈடுபட்டதால் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிஐஎம்பி வங்கியை ஏமாற்றுவதற்காகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக மூன்று குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
மொத்தமாக, எட்டுக் குற்றச்சாட்டுகளைத் தற்போது ஜாங் எதிர்கொள்கிறார்.