சிங்கப்பூரர்களின் ஒற்றுமை புவிசார் அரசியல் சூழலால் சோதனைக்கு ஆளாகும் நிலையில், முழுமைத் தற்காப்பு என்பது ஒரே நிலையில் தேங்கி நிற்கும் ஒரு கருத்துப் படிவமாக இருக்க முடியாது.
இவ்வாறு கூறிய மூத்த தற்காப்பு துணை அமைச்சர் ஸாக்கி முகமது, முழுமைத் தற்காப்பில் அனைத்து சிங்கப்பூரர்களும் தனி மனிதராவும் ஒட்டுமொத்த சமூகமாகவும் செயல்பட்டு ஒரு நாட்டை வலுவான, நிலையான, ஒருங்கிணைந்த நாடாக ஆக்குவதற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவது தொடர்பானது என்று தெரிவித்தார்.
முழுமைத் தற்காப்பு தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக முழுமைத் தற்காப்பு மாநாடு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்றது. அதில் திரு ஸாக்கி முகமது முக்கிய உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் கருப்பொருள் முழுமைத் தற்காப்பு என்பது நெருக்கடியை எதிர்கொள்வது பற்றியது மட்மல்ல என்றும் அது சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, தயார்நிலை ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்துவது பற்றியது என்றும் அமைச்சர் விளக்கினார்.
“சிங்கப்பூரில் நாம் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை அனுபவித்து வந்தபோதிலும், இந்தப் போக்கை நாம் காலப்போக்கில் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் ஸாக்கி முகமது சொன்னார்.
முழுமைத் தற்காப்பை 1984ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் அப்போது அரசாங்க சேவைக்கு தலைமை ஏற்றிருந்தவரும் தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்தவருமான திரு லிம் சியோங் குவான். மாநாட்டில் அவர் தமது உரையில் முழுமைத் தற்காப்பின் அடித்தளமாக விளங்கும் ஆறு தூண்களில் உளவியல் ரீதியிலான தற்காப்பே மிக முக்கியமான ஒன்று எனக் கூறினார். அதற்குக் காரணம் சிங்கப்பூரிடம் உள்ள திறன்கள், கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டை தற்காத்துக்கொள்ளும் மனஉறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
ராணுவம், குடிமைப் படை, பொருளியல், சமுதாய மற்றும் மின்னிலக்க தற்காப்பு என முழுமைத் தற்காப்பின் மற்ற தூண்களை அவர் விவரித்தார்.
இனி வரும் தலைமுறையினருக்கு முழுமைத் தற்காப்பின் தேவை குறித்து உலகில் ஏற்படும் சம்பவங்களின் துணையுடன் விளக்க வேண்டும். அந்த சம்பவங்களைக் கொண்டு முழுமைத் தற்காப்பை எவ்வாறு சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தலாம் என்று விளக்கலாம் என்றும் திரு லிம் கூறினார்.