சிங்கப்பூருக்குள் வரும் சரக்கை கையாள்வதற்கு சேட்ஸ் நிறுவனம் கிலோகிராமுக்கு நான்கு காசுகள் என விதிக்க இருந்த புதிய கட்டணம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்டணம் முதன் முதலில் ஏப்ரல் 15ஆம் தேதி அறிமுகம் காணவிருந்தது. எனினும், இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் இது பணவீக்கத்துக்கு வழிவிடுவதுடன் விநியோகச் சங்கிலித் தொடரின் செயல்பாட்டை பாதிக்கும் என்று கூறியதால். மே மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாம் முறையாகத் தற்பொழுது இந்தக் கட்டணம் ஆகஸ்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான சுற்றறிக்கை ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானது.
இதுபற்றி அந்த சுற்றறிக்கையில், “தங்களது யோசனைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதுடன் புதிய கட்டண விதிப்பை முறைப்படுத்தும் ஏற்பாடுகளைச் செய்யக் கூடுதல்அவகாசம் தேவைப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய கட்டணம் தற்பொழுது ‘சரக்கு முனைய கையாளும் கட்டணம்’ எனப் பெயரிடப்படும் என்று சேட்ஸ் நிறுவனம் விளக்கமளித்தது. முன்னதாக, இதை இறக்குமதியைக் கையாளும் கட்டணம் என்று இருந்தது. இந்த மாற்றம் சரக்கை கையாள்வது, உள்வரும் சரக்கை கையகப்படுத்துவது ஆகிய சேவைகளை தெளிவாக விளக்கும் வகையில் இருப்பதாகக் கூறியது.