அரசு ஊழியர் ஒருவரிடம் பொய்த்தகவல் தந்த குற்றத்தை வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஒப்புக்கொண்டார்.
வெளியுறவு அமைச்சு நிர்வாகப் பிரிவின் துணைச் செயலாளரான ஓங் எங் சுவானிடம் தான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி பொய்யுரைத்ததை திரு கில்பர்ட் ஓ ஹின் குவான், 45, ஒப்புக்கொண்டார்.
அரசதந்திரிகளுக்கு அளிக்கப்படும் பயணப் பை சேவை தொடர்பில் திரு ஓ மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவை தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசதந்திரிகளின் பயணப் பை அவர்கள் அதிகாரபூர்வ தகவல் பரிமாற்ற ஆவணங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு பயன்படும் பொருள்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல பயன்படும் சேவை.
அவை சீல் வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. தூதரக அதிகாரிகளுக்கு உள்ள சலுகைகளின்படி, அவை சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டாது.
சீனவைச் சேர்ந்த தமது தோழி ஒருவருக்கு உதவி செய்ய ஓ முற்பட்டதுதான் அவரது பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக விளங்கியது. ஓ சீனாவைச் சேர்ந்த தமது தோழி சிங்கப்பூருக்கு சொகுசு கைக்கடிகாரங்களை அனுப்ப உதவி செய்ய ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி ஜியாங் சி என்ற அந்த சீன நபர் அரசதந்திரி அல்லர். இதன் தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பெய்ஜிங்கிலுள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரியான திரு டியோன் லோக் செங் வான் என்பவரைத் தொடர்பு கொண்டார். அப்பொழுது சீனத் தூதரக அதிகாரியான தமது தோழியின் பெற்றோர் சிங்கப்பூரில் தம்மிடம் ஒரு பொட்டலத்தை தர விரும்புவதாகக் கூறினார்.
அரசதந்திர பயணப் பை மூலமாக அந்தப் பொட்டலத்தை கொண்டு சேர்க்க லோக்கின் உதவியை திரு ஓ நாடினார். அவரது இந்தக் கோரிக்கையை லோக் ஏற்றார்.
இதன்படி, திரு ஓ பெய்ஜிங்கில் திரு லோக் தங்கியிருந்த வீட்டின் முகவரியை திருவாட்டி ஜியாங்கிற்கு அளித்தார். இதைத் தொடர்ந்து திருவாட்டி ஜியாங் திரு லோக்கிடம் சீல் வைக்கப்பட்ட ஒரு பொட்டலத்தை அளிக்க ஏற்பாடு செய்தார்.
அந்தப் பொட்டலத்தில் 21 சொகுசு கைக்கடிகாரங்கள், ஒரு மோதிரம், சுமார் 7 பிள்ளைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் இருந்தன. அவை யாவும் திருவாட்டி ஜியாங், அவரது துணைவர் திரு லியு லியாங்குக்கு சொந்தமானவை.
இந்தப் பொருள்களின் மதிப்பு குறித்து அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.